![](pmdr0.gif)
நாக குமார காவியம்
மூலமும் சின்னசாமி நயினார் உரையும்
nAka kumAra kAviyam
verses with the commentaries of cinnacAmi nayinAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
நாக குமார காவியம்
மூலமும் சின்னசாமி நயினார் உரையும்
Source:
நாக குமார காவியம்
மூலமும் திரு.சின்னசாமி நயினார் அவர்களின் உரையும்
பதிப்பாசிரியர் : மு. சண்முகம் பிள்ளை
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை வெளியீடு 30,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1974
--------------
-
பொருளடக்கம்
நல்ல தமிழ் விருந்து
பதிப்புரை
முதல் சருக்கம்
இரண்டாம் சருக்கம்
மூன்றாம் சருக்கம்
நான்காம் சருக்கம்
ஐந்தாம் சருக்கம்
பின்னையோர் உரை
--------
நாககுமார காவியம்
நல்ல தமிழ் விருந்து
செந்தமிழ் வல்லார் திருமணம் செல்வக் கேசவராய முதலியாரால் தமிழ் கற்பார்க்குரிய நூல்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பெருமையுடையது இக் காவியம்.
பேராசிரியர் முன்னீ்ர்ப் பள்ளம் எஸ். பூரணலிங்கம் பிள்ளை தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூல்களுள் இதன் சிறப்பினை எடுத்துக் காட்டியுள்ளார். வேறு சிலரும் இந் நூல்பற்றி உரைத்துள்ளனர்.
தமிழ்ச் சான்றோர்களின் கருத்தைக் கவர்ந்த இச் சிறு காவியம் இப்பொழுதுதான் முதன் முறையாக அச்சில் வெளிவருகிறது.
------------
அச்சில் வரும் புதுநூல்-சைன காவியங்கள்-ஐம்பெருங் காவியம்-ஐஞ்சிறு காவியம்-நூற்றொகைப் பெயரின் பயன்- மூலப்படி - மூலப்படியின் நிலை - நூலும் உரையும்-காவிய அமைப்பு-கவிக் கூற்றால் கதை நடத்தல்-காவியப் பெயர்- காவியப் போக்கு-அருக சமயக் கோட்பாடுகள்-அருக தேவர் புகழ்மாலை-பெருங் காவியப் பண்பு - நாககுமார காவியமும் - யசோதர காவியமும் - நாககுமார காவிய காலம் பிறமொழிகளில் நாககுமார சரிதம்-காவிய ஆசிரியர் - நன்றியுரை.
அச்சில் வரும் புதுநூல்
தமிழ்க் காவிய வரிசையில்-சிறப்பாக சைன சமயஞ் சார்ந்த காவி யங்களுள் இதுகாறும்
அச்சிடப்படாது எஞ்சி நின்றவற்றுள் ஒன்றே நாககுமார காவியம். இக் காவியம் இப்பொழுதுதான் முதன் முதலாக அச்சில் வெளி வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை வெளியிடும் ‘தமிழாய்வு’ அரையாண்டு இதழிலே வெளிவரும் ‘அச்சில் வாரா அருந்தமிழ்’ வரிசையில் இஃது இரண்டாவதாக இடம் பெறுகின்றது.
சைன காவியங்கள்
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரம் சைனசமயச் சார்புடைய பழைய காவியம். சைன சமயக் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்க எழுந்த பிற காவியங்கள் பெருங்கதை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, மேருமந்தர புராணம், யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம், சாந்தி புராணம் முதலியனவாம். இவற்றுள் பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பவை ‘பெருங்காவியம் என்னும் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க இயல்புடையவை. ஏனையவை அத்துணை நடைச் சிறப்பும், பொருட் பொலிவும் விஞ்ச அமைந்தவை அல்ல. சைன சமயச் சார்பான உண்மைகள் சிலவற்றைச் சொல்லும் நோக்குடன் இவை இயற்றப்பட்டிருப்பதாலேயே எங்கும் பெருக வழங்கிப் பொது மக்களிடையில் நிலைபேறான ஓர் இடத்தைப் பெற இயலவில்லை போலும்.
ஐம்பெருங் காவியம்
‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு, தமிழுலகில் நீண்ட காலமாக வேரூன்றி விட்டது. இவ் வழக்கினை எழுத்துருவில் பதித்தவர் இப்பொழுது தெரிகின்ற வரையில் நன்னூலின் ‘முதல் உரையாசிரியராகிய மயிலைநாதரே யாவர். நன்னூல் 387ஆம் நூற்பாவாகிய ‘இன்னது இன்னுழி இன்னணம் இயலும் என்பதன் உரையில்,
“இவ்வாறே ஆண்பாற் பொருட் பெயரும் பெண்பாற் பொருட்பெயரும் ஏனைப்பாற் பொருட் பெயரும் இடப்பெயரும் காலப் பெயரும் சினைப் பெயரும் பண்புப் பெயரும் தொழிற் பெயரும் மரபுப் பெயரும் ஐம்பெருங்காவியம் எண் பெருந்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கியங்களுள் ளும் விரிந்த உரிச் சொற் பனுவலுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக” என்று உரிச்சொல் வழக்குப் பற்றி உரைக்குமிடத்துக் குறிப்பிட்டுளளார். எனவே,‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு மயிலைநாதரின் காலமாகிய கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டே எழுந்ததாகும் என்பது தெளிவு.
ஐஞ்சிறு காவியம்
ஐம்பெருங் காவியம் என்பது போலவே ‘ஐஞ்சிறு காவியம்’ என்னும் ஒரு வழக்கும் ஒரு சில புலவரால் எடுத்துக் காட்டப்படுகிறது. இது மிக முற்பட்ட வழக்கெனக் கூறவியலாவிடினும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களிடையே நிலவியிருந்தது என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. தமிழ்நூற் பதிப்பாசிரியர்களுக்கு ஒரு முன்னோடியாய் ஏட்டுச் சுவடிகளிலிருந்து நூல்களை அச்சிடும் கலையில் வல்லவராய், பதிப்பாசிரியர் திலகமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் (கி.பி. 1832-1901) தாம் எழுதிய பதிப்புரைகளில் தமிழ் நூல் வரலாறுகளைத் தொகுத்து எழுதியுள்ளார். அவருடைய சூளாமணிப் பதிப்புரையில் ஐஞ்சிறு காவியங்களின் அறிமுகம் உள்ளது. அவர் தரும் விளக்கவுரை வருமாறு.
“மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் காலத்தின் பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனஞ் செய்தவர்கள் சமணரென்பதூஉம், இக் காலத்திற் தமிழ் கற்போர் இலக்கண இலக்கியப் பயிற்சிக்காக ஓதிவரும் நூல்களிற் பெரும்பான்மையின சமணர் காலத்திற் சமணாசிரியர்களால் எழுதப்பட்டன வென்பதூஉம் முன் வீரசோழியப் பதிப்புரையில் கூறியிருக்கின்றேன்”.
-
அவற்றுட் சீவக சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர் எழுதி வைத்த யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், சூளாமணி, நீலகேசி யெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள.”
(சூளாமணிப்பதிப்பு1889- பதிப்புரை,பக்.3)
“சூளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதி களிலிருக்கும் குறியீ்ட்டினாற் தெரிய வருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக்கிரமம் இன்னதென்றும் விளங்க வில்லை. நீலகேசி என் கைக்கு அகப்படவில்லை. ஆயிரத்து நானூற்று சொச்சஞ் செய்யுளுள்ள மேரு மந்தர புராணத்தில் முதற்பாகமும் யசோதர காவியமுங் காஞ்சிபுரத்திலிருந்த ஸ்ரீ பாகுபலி நயினாரால் அச்சிடப்பட்டன. எஞ்சியன அச்சில் வரவில்லை. சுரவிரத காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினும் தமிழிற் செய்யப்பட்டதாகத் தெரிய வில்லை.”
நீலகேசி தவிர ஏனைய காவியங்களின் பிரதிகள் இவருக்குக் கிடைத்திருந்தன என்பது இப் பகுதியால் வெளியாகிறது. இவர்தம் ஆய்வுரையைக் கொண்டே முற்பட இலக்கிய வரலாறு எழுதிய பூரண லிங்கம் பிள்ளை முதலியோரும் ஐஞ்சிறு காவியம் என்னும் தொகுதி பற்றி விளக் கம் தந்துள்ளனர்.
-
“பற்றா மிலக்கணநூற் பாவும் நூற் பாவறிந்து
கற்றார் வழங்கு பஞ்ச காப்பியமும்--கொற்றவருக்
கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும்”
(தமிழ் விடுதூது 52-53)
இவ்வாறாகவே, சூளாமணி ஒழிந்தனவே சிறு காவியங்கள் எனப்படுதல் வேண்டும். காவிய நூல்களை ஆராய்ந்த அறிஞர் பலரும் ஐம் பெருங்காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் பகுப்புள் சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் அத்தகுதி படைத்தன அல்ல எனச் சுட்டிக்காட்டிச் செல்கின்றனர்.[1]
-----------------
[1]. தமிழ்க் காப்பியங்கள்: கி.வா.ஜகந்நாதன் பக்.117, 126, 131.
காவியகாலம்-பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, பக்.187-188.
தமிழ் இலக்கிய வரலாறு-பத்தாம் நூற்றாண்டு மு. அருணாசலம்,பக்.37-38.
தமிழ் இலக்கிய வரலாறு-டாக்டர் மு.வரதராசன்,சாகித்திய அக்காதெமி
வெளியீடு, 1972, பக்.150-151.
நூற்றொகைப் பெயரின் பயன்
ஐம்பெருங் காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் நூற்றொகுப்பு முறை யும் பெயர் வழக்கும் பொருத்தமின்று என்று ஆய்வாளர் கருதிய போதி லும், நூல்களைப் பின்னுள்ளார் அறிந்து போற்றுவதற்கு இவ்வகைத் தொகைப் பெயர்கள் துணை செய்தன என்பது உண்மை. சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் எழுதிய குறிப்புத் தமிழறிஞர்களுக்கு அந்நூல்களை நினைவு படுத்தத் துணை செய்து வந்துள்ளது. ஐஞ்சிறு காவியத்துள் ஒன்றாக அவர் கருதிய ‘நாககுமார காவியம் இன்னும் வெளிவர வில்லையே, அதனைத் தேடவேண்டும்’ என்னும் ஊக்கத்தையும் தமிழன்பர்களுக்குத் தந்து வந்திருக்கிறது. இதன் பயனாகத்தான் இந் நாககுமார காவியமும் இப்பொழுது அன்பர்களால் தெரிந்தெடுத்துப் பாதுகாக்கப்பட்டது.
மூலப்படி
நாககுமார காவியத்தின் கையெழுத்துப் படியைப் பெற்றுச் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ‘தமிழாய்வு’ இதழில் வெளியிடத் தந்தவர் சமண சமயக் காவலர், ஜீவபந்து என்னும் சிறப்புப் பெயர்களைத் தம் தொண்டின் சிறப்பாலே கொண்டு விளங்கும் பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களாவர். அவர்களுக்கு இக் காவியப் படியைத் தந்தவர் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள தச்சாம்பாடிச் சைனப் பேரறிஞர் ஜெ.சின்னசாமி நயினார் அவர்களாவர்.
இவ்விருவரும் இக் காவியம் தமிழகத்தில் உயிர் பெற்று உலவும் வகையில் உதவி புரிந்துள்ளமையினால் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் என்றும் உரியவர்களாவர்.
மூலப்படியின் நிலை
திரு. சின்னசாமி நயினார் தமக்குக் கிடைத்த சிதைந்த மூல ஏட்டுப்படி யொன்றிலிருந்து எழுதிப் பல ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தார். இந்நூலுக்கு ஓர் உரையெழுதவும் முனைந்து ஓரளவு செய்திருந்தார். இது குறித்துத் தச்சாம்பாடி திரு.ஜெ.சின்னசாமி நயினார் அவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டு கேட்டதில் பின்வரும் செய்திகள் தெரிய வந்தன.
“அடுத்து வரும் ‘தமிழாய்வு’ இதழில் (பகுதி-2) நாககுமார காவிய வெளியீட்டின் முயற்சியைப் பெரிதும் வரவேற்கிறோம். அந்நூலை 20 ஆண்டுகட்கு முன் கிலமடைந்ததோர் ஏட்டுப் பிரதியிலிருந்து படிவம் எடுத்தேன். அக்கதை தமிழிலும் இல்லை. சமஸ்கிருத நூற்பயிற்சியும் எனக்கில்லை. புண்ணியாஸ்ரவ கதையைக்கொண்டு முதற் சருக்கத்திற்குக் குறிப்புரை எழுதினேன். இடையில் வேறோர் செம்மையான கதை (கையெழுத்துப் பிரதி)யைக் கொண்டு பொழிப்புரை வரைந்தேன். இரண்டும் ஏட்டுப் பிரதியில் இல்லை, என் முயற்சிதான். அம் முதற் சருக்கத்திற்கும் சமஸ்கிருத நாககுமார காவியம் பயின்றவர்களைக் கொண்டு செப்பஞ் செய்து விடலாமென விட்டு விட்டேன். அரும்பதவுரையை நீக்கி அதற்கும் பொழிப்புரை வரைந்து வெளியிடலாம்.”
(21-11-72ஆம் நாள் கடிதம்)
இவர்கள் படியெடுத்த மூல ஏட்டுப் படியாகிலும் கிடைத்தால் விளங்காத பகுதிகளை மேலும் ஊன்றி ஆய்ந்து நோக்கலாம் என்று கருதினேன். அதனைப் படி செய்தவரிடமேகூட அஃது இன்று இல்லை என்பது,
“நாககுமார காவியமும் யானே ஏட்டுப் பிரதியிலிருந்து படியெடுத்தேன். கதைப் போக்கைக் கொண்டு ஊகமாகத் திருத்தியுள்ளேன். வேறு பிரதியொன்றை இயன்றவரை முயன்று தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த பிரதியும் மிகப் பழுதடைந்த பிரதியாதலின் கை தவறிப் போயிற்று” என்னும் திரு.சின்னசாமி நயினார் அவர்கள் 22-11-72ல் எழுதிய மற்றொரு கடிதத்தால் தெரியவருகிறது.
நூலும் உரையும்
மூலப்படியும் கிட்டாநிலையில், படியெடுத்தவர் ஊகமாகத் திருத்தி எழுதிய நிலையில் இந்நூலைச் செம்மையுற அமைத்துவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. ஓரளவு செம்மை செய்து மூலபாடம் தரப்பட் டுள்ளது. வேறு நல்ல சுவடி இனிக் கிடைக்கப்பெறுமேல், இந்நூல் மேலும் திருத்தமுற அமைதல் உறுதி. எனினும் இந்த அளவிலேனும் பழைய காவியம் ஒன்றை அச்சில் பதிப்பிக்க இயன்றதே என்பதை எண்ணும்போது ஓரளவு ஆறுதல் ஏற்படுகிறது.
திரு, சின்னசாமி நயினார் அவர்கள் இரண்டாம் சருக்கம் முதல் நூல் முழுமைக்கும் எழுதிய உரைப் பகுதியை ஒழுங்குபடுத்திச் செப்பஞ் செய்துள்ளேன். முதற் சருக்கத்திற்கு மட்டும் யான் பொழிப்புரை வரைந்து சேர்த்துள்ளேன். இவ்வாறாக இந்நூல் முற்றும் பொழிப்புரையுடன் இப்பொழுது வெளியாகிறது. இவ்வுரைப்பகுதி மூல நூற் கதையையும் ஆராய்ந்து எழுதப்பெற்றுள்ளமையால் பாடலின் நேர் பொழிப்புரையோடு தொடர்புடைய வேறு செய்திகளும் உடன் சேர்ந்திருக்கும். இக்காவியப் பொருள் விளக்கத்திற்கு அப்பகுதிகளும் இன்றியமையாதனவாதலின் அப்படியே தரப்பட்டிருக்கின்றன.
காவிய அமைப்பு
நாககுமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170 பாடல்களையும் கொண்டுள்ளது. காப்புச் செய்யுள் நூலிற்குப் புறம்பாய் முதற்கண் அமைந்துள்ளது. இச்சருக்கங்களை ஒவ்வொன்றிலும் அடங்கிய பாக்களின் அளவு குறித்துக்கூறும் இரண்டு பாடல்கள்
நூலிறுதியில் காணப்படுகின்றன.
-
“முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்துநான்காம்
பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்றுதன்றே.’
‘இன்புறு மைந்து தன்னி விரட்டித்த பதின்மூன் றாகும்
நன்புறக் கூட்ட வெல்லா நான்கைநாற் பதின்மாற
வன்பினற் றொகையின் மேலே வருவித்தீ ரைந்தாகும்
இன்புறக் கதையைக் கேட்பாரியல்புடன் வாழ்வ ரன்றே.’
சருக்கங்கள் முதல், இரண்டு என எண்ணுப் பெயரால் குறிக்கப் படுகின்றனவேயன்றி அவற்றிற்குத் தனிப் பெயர் தரப்படவில்லை. வடமொழியிலுள்ள நாககுமார காவியமும் இவ்வாறேதான் உள்ளது. இது சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் முதலிய காவியங்களைப் போல விருத்தயாப்பில் அமைந்துள்ளது. தமிழில் விருத்த காவியங்களே மிகுதியாயுள்ளன.
‘திருத்தக்க மாமுனி சிந்தாமணியும் கம்பன் விருத்தக் கவித்திறமும்’ காவியம்
பாடுவார்க்கு வழிகாட்டியிருக்கின்றன என்னலாம்.
கவிக் கூற்றால் கதை நடத்தல்
கதை நடத்திச் செல்லுகின்ற திறத்திலும் பிற காவிய மரபுகளை இதுவும் பெற்றுள்ளது. இடையிடையே கவிக் கூற்றாகக் கதைப் போக்கினைத் தெரிவித்து மேலே விவரித்துச் செல்வது ஒரு மரபு. இம் மரபினை இக்காவியத்துள்ளும் காணலாகும்.
‘செந்தளிர்ப் பிண்டியின்கீழ்’ எனத் தொடங்கும் இக்காவியத்தின் முதற் செய்யுள், தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைக்கின்றது. ‘கொந்தலராசன் நாககுமார னற்கதை விரிப்போம்’ என்று இதிலே தோற்றுவாய் செய்கிறார் கவிஞர். இவ்வாறே மூன்றாம்
சருக்க முதலிலும்,
-
‘அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர் வந்து சேர்ந்தது கூற லுற்றேன்’
காவியப் பெயர்
இக் காவியத்திற்கு ‘நாக பஞ்சமி கதை’ என்றும் ஒரு பெயர் உண்டு. வடமொழிக் காவியத்தின் ஒவ்வொரு சருக்க முடிவிலும் இப் பெயரை அதன் ஆசிரியர் மல்லிசேனர் குறிப்பிடுகின்றார். விபுல மலையிலுள்ள சமவசரணத்திற்குத் தன் சுற்றத்தாரோடு வந்து வணங்கிய சிரேணிக மகாராசன் கௌதம முனிவரை வணங்கித் தருமங் கேட்கிறான். தரும தத்துவங்களைக் கேட்டபின், அம் முனிவரிடம் ‘பஞ்சமி கதை’யினை உரைக்க வேண்டுகிறான். நற்றவர்க்கு இறையான நற் கௌதமர் சிரேணிக மகாராசனுக்குச் சொல்வதாகவே இக் காவியக் கதை அமைந்துள்ளது. இதனை,
-
‘சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே’
(நாக.25)
காவியப் போக்கு
நாககுமாரன் சரிதம் 26ஆம் பாடலுடன் தொடங்குகிறது. இது முதலாக நான்காம் சருக்கம் வரையில் நாககுமாரனின் வீரதீரச் செயல்களும், காதல் களியாட்டங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.
இறுதிச் சருக்கமான ஐந்தாம் சருக்கம் நாககுமாரனின் முற்பிறப்பு வரலாற்றையும், பஞ்சமி விரத நோன்பையும், அதனால் விளையும் பெரும் பயனையும், துறவு நிலையையும் எடுத்துரைக்கின்றது.
நாககுமாரன் அரசகுல மங்கையரையும் பிறரையும் திருமணம் செய்துகொள்கிறான். காவிய நெடுகிலும் இவன் செய்து கொண்ட திருமணங்கள் பல பேசப்படுகின்றன. அவனும் வீரச் செயல்களைப் போலவே இன்பம் அனுபவிப்பதிலும் நாகலோக வாசிகள் போலக் காணப்படுகிறான். மன்னர் பலரும் மாவீரர்களும் இவனுக்கு உற்ற துணைவர்களாயிருந்து இவனிட்ட ஏவலை ஏற்றுப் பணி புரிகின்றனர்.
இத்தகு சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த இவன் முனிவர்பால் தருமம் கேட்டு, ஞான நன்னிலை பெறுகிறான். இறுதியில் தன் மகன் தேவ குமாரனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொள்கிறான். நாககுமாரன் துறவேயன்றி செயவர்மாவின் துறவு (78), சோமப்பிரபனின் துறவு (107) முதலியனவும் இக்காவியத்துள் இடம் பெறுகின்றன. எனவே, உலக இன்பங்களில் சிக்கிச் சுழன்றாலும் இறுதியில் துறவு பூண்டு இறைநிலை பெறவேண்டும் என்னும் குறிக்கோளையும் இக் காவியம் எடுத்துரைக்கின்றது.
அருக சமயக் கோட்பாடுகள்
அருக சமயக் கோட்பாடுகளம் இக் காவியத்தில் அங்கங்கே சுட்டப்பட்டுள்ளன. சினாலயங்களுக்குச் சென்று வணங்குதலும், முனிவர்களைத் தொழுது தருமங் கேட்டலுமாகிய நிகழ்ச்சிகள் இடையிடையே வருதல் காணலாம். அருக தேவரைத் துதித்து உளமுருகப் பாடும் பாடல்களும் இக்காவியத்திலுள்ளன.
அருக தேவர் புகழ்மாலை
சிரேணிக மகாராசன் வர்த்தமான மகாவீரரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஐந்து (16-20) முதல் சருக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
-
'பொறியொடு வல் வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப் பிண்டிப் போதன் நீயே!’
நான்காம் சருக்கத்தில் நாககுமாரன் சயந்தகிரிச் சினாலயம் பணிந்து முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியைப் போற்றுகிறான்:
-
'முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே’ (118)
பெருங்காவியப் பண்பு
இங்ஙனம் சிறுகாவியமாகிய இதில் பெருங்காவியக் கூறுகள் பல விரவிவரக் காணலாம். பெருங்காவிய இலக்கணத்திற்குத் தண்டியலங்காரம் வகுக்கும் இலக்கணமே மேல்வரிச் சட்டமாக விளங்குகிறது: ‘பெருங்காப் பியநிலை பேசுங் காலை’ என்னும் நூற்பாவில் காணும் பொருள்களிற் பெரும்பாலனவும் இக் காவியத்தின்கண் இடம்பெற்றுள்ளன. சூதுபோரை எடுத்துக் கொண்டுள்ள இக்காவியம் ‘மதுக்களியை’ எவ்விடத்தும் சுட்டாமை கருதற்பாலது.
நாககுமார காவியமும் யசோதர காவியமும்
இந் நாககுமார காவியத்திற்கும் பிற காவியங்களுக்கும் தொடர்புண்டா என்பதும் ஆய்தற்குரியது. காவிய அமைப்பில் யசோதர காவியத்துடன் இது ஒருசில வகைகளில் ஒத்துக் காணப்படுகிறது. தெய்வ வணக்கம், அவையடக்கம், நூற்பயன், நாடு நகரச் சிறப்பு என்று வருகின்ற முறைமை முதலிற் காணும் ஒருமை நிலை. இவற்றுள் அவையடக்கச் செய்யுள் இரு நூலிலும் ஒரே வகையில் உரைக்கப்பட்டிருக்கின்றது:
-
'புகைக்கொடி யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவி ளக்கை
இகழ்ச்சியி னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர்
அகத்தினி மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச்
செகத்தவ ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே’
-
'உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென்
றெள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே’
நாககுமார காவிய காலம்
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தாம் எழுதிய ‘கம்பநாடர்’ என்னும் நூலிலே தமிழில் தண்டியலங்காரம் தோன்றுவதற்கு முன்னரே காவியங்கள் ஏற்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூற்று வருமாறு.
“தமிழில் தண்டியலங்காரம் ஏற்படுவதற்கு முன்னரே ஐம்பெருங் காப்பியங்களில் சிந்தாமணியும் ஐஞ்சிறு காப்பியங்களும் ஏற்பட்டு விட்டன. இவைகளெல்லாம் பெரும்பான்மை வடமொழிக் காப்பியங்களின் போக்கைப் பின்பற்றியவை. இவற்றைப் பாடிய கவிகள் வடமொழிப் புலமை நிரம்பிய ஜைனப் புலவர்கள்.”
இப்பெரியார் கருத்துப்படி தமிழ்த் தண்டியலங்காரம் தோன்றிய காலம் எனக் கருதப்படும் கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை ஐஞ்சிறு காவியங்கள் என்பது பெறப்படும். எனவே, ஐஞ்சிறு காவியங்களுள் ஒன்றான நாககுமார காவியமும் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றிய நூல் என்பது வெளிப்படை.
ஐஞ்சிறு காவியங்களுள் யசோதர காவியமும் நாககுமார காவியமும் பழைய உரைகாரர் எவராலும் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை. கி.பி.14ஆம் நூற்றாண்டில் அறம் பொருள் பயக்கும் காவிய நூற் பாடல் களைத் திரட்டித் தந்துள்ள ‘புறத்திரட்‘டில் இவ்விரு காவியச் செய்யுள்கள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே, இக்காவியங்கள் மேற்குறித்த கால எல்லைக்குப் பிற்பட்டுத் தோன்றியவை என்று கொள்ளலாம் என்று கருதுவாரும் உண்டு. ஒரு நூல் முன்னையோரால் எடுத்தாளப்படாமையினாலேயே பிந்தியது என ஒருதலையாகத் துணிய முடியதாயினும் ஐயுறவு கொள்வதற்கு இடமுண்டு.
இருபத்துநான்கு தீ்ர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் ‘ஸ்ரீபுராணம்’என்னும் மணிப்பிரவாள நடையிலுள்ள தமிழ் நூலுள் நாககுமார காவியத்தின் தோற்றுவாயாகத் தரப்பட்டுள்ள சிரேணிக மகாராசனின் வரலாறு காணப்படுகிறது. இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் பகுதியாகிய ஸ்ரீ வர்த்தமான புராணத்தில் சிரேணிக மகாராசன் விபுலகிரி சிகரத்தில் உள்ள சமவசரண மண்டலத்தில் ஸ்ரீ வர்த்தமானரைத் தொழுது போற்றியமையும், அங்குக் கௌதம சுவாமியிடம் தன் முன்னைப் பிறப்புத் தொடர்பினை வினவியறிந்ததும் சொல்லப்பட்டிருக்கிறது (பக்.505-506). சிரேணிக மகாராசனின் தேவியாகிய சேலினியைப் பற்றியும் குறிக்கப்பட்டிருக்கிறது. (பக்.512-513). எனவே, ஸ்ரீபுராணத்திற்குப் பின்னரே இக் காவியம் தோன்றியிருத்தல் கூடும்.
தமிழிலுள்ள ஸ்ரீபுராணத்தின் காலம் பல்வேறு குறிப்புகளைக் கொண்டு ஏறக்குறைய கி.பி.15ஆம் நூற்றாண்டு என்று அந்நூற்பதிப்பிற்குத் தாம் எழுதிய ஆங்கில முகவுரையில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழ் நூல் வடமொழியில் கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘மகாபுராண‘த்தைப் பெரிதும் தழுவிச் செல்கிறது. பழங் கன்னடத்தில் கி.பி.997-ல் இயற்றப்பட்ட ‘சாமுண்டராய புராண’மும் வடமொழி மகாபுராணத்தைப் பின்பற்றி எழுந்ததேயாகும்.
நாககுமாரன் சரிதம் இந்நூல் மூலத்திலிருந்தே வளர்ந்து பெருகியது எனக் கருத இடமுண்டு.
எனவே, இஃது இம்மூல நூல்களின் காலத்திற்குப் பிற்பட்டுத் தோன்றியதாதல் வேண்டும்.
கி,பி. பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்தர் என்பவர் அவப்பிரம்ஸ மொழியில் நாககுமார சரிதத்தை விரிவாக யாத்துத் தந்தார் என்பது தெரியவருகிறது. இதை அடியொற்றியே வடமொழி, கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஜைன ஆசிரியர்களால் இச் சரிதம் தனி நூலாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகை வரலாற்றுச் சூழல்களைக் கொண்டு பார்க்கும் போது திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் கொண்ட கருத்துப் பொருத்தமானது என்றே எண்ண இடமாகிறது. ஆதலால், இத்தமிழ்க் காவியமும் கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றியது எனக் கொள்ளலாம்.
பிற மொழிகளில் நாககுமார சரிதம்
‘நாககுமார சரிதம்‘ என்பது ‘பஞ்சமி சரிதம்‘, ‘நாககுமார கதை‘ என்னும் பெயர்களாலும் பிற மொழிகளில் செய்யப் பெற்றிருக்கிறது. அவப்பிரம்ஸ மொழியில் புட்பதந்தர் செய்த நூல் பற்றி முன்னர்க் குறிப்பிடப்பட்டது.[1] வடமொழியில் உள்ள நாககுமார சரிதம்[2]. அந்நூலை ‘நாகபஞ்சமி கதை‘ என்றும் குறிப்பிடுகிறது. இதனை இயற்றியர் சைனப்புலவராகிய மல்லிசேனர் என்பவராவர். இவ்வடமொழிக் காவியத்தில் ஐந்து சருக்கங்களும் அவற்றுள் முறையே 119, 74, 113, 105, 87 பாடல்களும் உள்ளன. இக் காவியத்தில் உள்ள 498 பாடல்களுள் ஒவ்வொரு சருக்கத்தின் ஈற்றிலுமுள்ள 5 பாடல்களைத் தவிர ஏனைய 493 கவிகளும் ‘அநுஷ்டுப்‘ என்னும் பாவகையில் அமைந்துள்ளன. கதைப் போக்கில் இவ் வடமொழிக் காவியத்திற்கும் தமிழ்க் காவியத்திற்கும் ஒரு சில இடங்களில் வேறுபாடு காணப்படுகிறது. இந்நூல் தவிர தாரசேனர் என்பவர் இயற்றிய வடமொழிக் கவிதையாலான நாககுமார சரிதம் ஒன்றும் உள்ளது. இராமச்சந்திர முமுட்சு வடமொழியில் எழுதிய ‘புண்ணியாஸ்ரவ கதையிலும்‘ இச்சரிதம் இடம் பெற்றுள்ளது. பாகுபலி கவி என்பவர் கன்னட மொழியில் நாககுமார சரிதம் இயற்றியுள்ளார். இதுதவிர இரத்னாகரகவி எழுதிய நூல் ஒன்றும் கன்னடத்தில் உள்ளது. இவ்வாறாகப் பல மொழிகளிலும் போற்றிக் காவியமாக்கப் பெற்ற சிறப்புடையது இந் நாககுமார சரிதம் என்பது தெரிய வரும்.
-----------
[1.] இந்நூல் 1933ஆம் ஆண்டு கிரிலால் ஜெயின் என்பவரால் முதன்முதல் பழைய சுவடியிலிருந்து அச்சிடப்பெற்றது. இதில் பதிப்பாசிரியர் சிறந்ததோர் ஆராய்ச்சி முகவுரையை ஆங்கிலத்தில் தந்துள்ளார். இம் முகவுரையில் நாக குமார சரிதம் பற்றிப் பல மொழிகளிலும் வந்துள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளை விவரித்துள்ளார். மற்றும் இச் சரிதம் முழுமையும் அந்நூலுள் காண்கிறபடி எழுதியிருப்பதோடு அந்நூலால் வெளிப்படும் சிறப்புச் செய்திகளையும் வகைப்படுத்தி விளக்கியுள்ளார். Nayakumaracariu of Puspadanta, Edited by Hiralal Jain, M.A., LL.B., Balatkaragana Jaina Publication Society, Karanja, Berar (India), 1933.
[2]. வடமொழிக் காவியச் செய்திகளை அறிவதற்கு எனக்கு உதவியது பேராசிரியர் கே.ரங்காசாரியாரால் பூனாவில் உள்ள பண்டர்கார் கீழைக்கலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட பேராசிரியர் காசிநாத் பாபுஜி பதக் (13-10-1850--2-9-1932) என்பாரின் நினைவு மலரில் (1934) எழுதப்பட்ட ஒரு கட்டுரை யாகும்.
---------
காவிய ஆசிரியர்
தமிழ் நாககுமார காவியத்தை ஆக்கிய ஆரியர் பெயர் அறியக்கூட வில்லை. இக் காவியத்திற்கு வேறு நல்ல ஏட்டுச் சுவடிகள் கிடைக்குமானால், ஒருகால் தெரிவதற்கு ஏதுவுண்டு. இதன் ஆசிரியர் சைன சமயத்தவராவர் என்பதும் சைன சமயக் கோட்பாடுகளில் தேர்ந்தவர் என்பதும் இக்காவியத்தால் புலப்படும். கதைகளைத் தொகுத்தும் வகுத்தும் உரைக்கும் கலையில் இவர் கைதேர்ந்தவர் என்பது இக்காவிய நடையினால் நன்கு விளங்கும்.
நன்றியுரை
‘தமிழாய்வு‘ இதழில் ‘அச்சில் வாரா அருந்தமிழ்‘ வெளியீட்டு வரிசை யில் இந்நூலை வெளியிடுவதற்கு மூலப்படியைத் தேடிப் பெற்றுத் தந்த பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களுக்கும் பழுதான ஒரு பிரதியைப் படி யெடுத்துக் காப்பாற்றி வைத்து வழங்கிய தச்சாம்பாடி சின்னசாமி நயினார் அவர்களுக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியது. இந் நூலை வெளியிட அவ்வப்போது ஊக்கி ஆவன செய்துவரும் தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர், டாக்டர், ந.சஞ்சீவி அவர்களுக்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையேன். இந்நூலின் அச்சுப் பணியில் எனக்கு அவ்வப்போது உதவிய திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதியில் பணிபுரியும் ஆராய்ச்சித் துணைவர் கு.மோகனராசு, தமிழ்த் துறை ஆராய்ச்சி மாணவர் அ.நாகலிங்கம் ஆகியோருக்கும் என் நன்றி உரியது.
‘தமிழாய்‘வில் வெளியிடப்படும் இக்காவியத்தைத் தனி நூலாகவும் வெளியிட வாய்ப்பளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெருந்தகை தாமரைச் செல்வர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.
சென்னை, திருக்கார்த்திகைத் திருநாள், 8-12-73
மு. சண்முகம் பிள்ளை
-------------
நாக குமார காவியம்
முதல் சருக்கம்
-
மணியுநற் கந்தமுத்து மலிந்த முக்குடை யிலங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர் தமக்கு மெந்தம்
இணைகரஞ் சிரசிற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.
அருகக் கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்றாக நேமிநாதன் என்பதனைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது. தரும சக்கரத்தையுடைய இறைவன் என்பது இதன் பொருள். ‘அறவாழி யந்தணன்’ என (குறள்-8) வள்ளுவர் குறிப்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.
இந் நேமிநாதர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் என்று அரிவம்ச புராணம் கூறுகிறது.
நல்ல அழகிய இரத்தினங்களும் நறுமணப் பொருள்களும் நிறைந்து முக்குடை ஒளிர்கின்றது. இத்தகு குடையின் நிழலில் அசோக மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கிறார் நேமீசராகிய அருக தேவர். இவருடைய திருவடிகளை வணங்கும் பொருட்டு வாணி பாதத்தையும், குருவின் பாதத்தையும் எம்முடைய இரு கரங்களையும் தலைமேல் குவித்து முறைப்படி வணங்குவோம்.
தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
-
1. செந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செழுமணி மண்ட பத்துள்
இந்திர னினிதி னேத்து மேந்தரி யாச னத்தின்
அந்தமா யமர்ந்த கோவி னருள்புரி தீர்த்த காலங்
கொந்தல ராசன் நாக குமரனற் கதைவி ரிப்பாம்.
-
2. திங்கள் முந்நான்கு யோகந் தீவினை யரிய நிற்பர்
அங்கபூ வாதி நூலு ளரிப்பறத் தெளிந்த நெஞ்சிற்
தங்கிய கருணை யார்ந்த தவமுனி யவர்கள் சொன்ன
பொங்குநற் கவிக்க டறான் புகுந்துநீர்த் தெழுந்த தன்றே.
அரிப்பற-குற்றம் நீங்க.
அங்கபூவாதி நூல்-அங்க பூர்வாங்க ஆகமம். (2)
அவையடக்கம்
-
3. புகைக்கொடி யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவிளக்கை
இகழ்ச்சியி னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர்
அகத்தினி மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச்
செகத்தவ ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே.
என் சொற்களைத் தத்தம் அறிவினால் ஏற்றுக் கொள்வார். அவ்வாறு ஏற்காதவர் மிக அரியராவர். உலகத்தவரும் கூர்ந்து கேட்கும் வண்ணம் சொல்வது என் பொறுப்பாகும். (3)
கேட்போர் பெறு பயன்
-
4. வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன் கடைக்கும் வாயகள்
செவ்விதிற் புணர்ந்து மிக்க செல்வத்தை யாக்கு முன்னங்
கவ்விய கரும மெல்லாங் கணத்தினி லுதிர்ப்பை யாக்கும்
இவ்வகைத் தெரிவு றுப்பார்க் கினிதுவைத் துரைத்து மன்றே.
மகத நாட்டுச் சிறப்பு
-
5. நாவலந் தீப நூற்றை நண் ணுதொண் ணூறு கூறில்
ஆவதன் னொருகூ றாகு மரியநற் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி்
மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதோர் மகதநாடு.
இராசமாகிரிய நகரம்
-
6. திசைகளெங் கெங்குஞ் செய்யாள் செறிந்தினி துறையு நாட்டுள்
இசையுநற் பாரி சாத வினமலர்க் காவுஞ் சூழ்ந்த
அசைவிலா வமர லோகத் ததுநிக ரான மண்ணுள்
இசையுலா நகர மிக்க விராசமா கிரிய மாமே.
ஒப்பாக இப் பூமியுள் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது மகத நாட்டின் தலைநகராகிய இராசமாகிரியம். (6)
-
7. கிடங்கரு கிஞ்சி யோங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத் திலங்கு மாடங் கதிர்மதி சூட்டி னாற்போல்
படங்கிடந் தல்கு லார்கள் பாடலோ டாட லாலே
இடங்கொண்ட வின்ப மும்ப ரிடத்தையு மெச்சு மன்றே.
சிரேணிக ராசனின் செங்கோலாட்சி
-
8. பாரித்த தன்மை முன்னம் பாலித்தற் கைம்ம டங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை யெழுந்த மேகம்
வாரித்த திசைந்த ளிக்கும் வண்கையம் பொற்றிண் டோளான்
சீரித்த தலங்கல் மார்பன் சிரேணிக ராசனாமே.
-
9. ஆறிலொன் றிறைகொண் டாளு மரசன்மா தேவி யன்னப்
பேறுடை நடைவேற் கண்ணாள் பெறற்கருங் கற்பி னாள்போ
வீறுடைச் சாலி னீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
நாறுடைத் தார ணிந்த நகைமதி முகத்தி னாளே.
கொண்டையையும் உடையவள், மணம் பெற்ற மாலையை அணிந்தவள். விளங்குகின்ற முழுமதி போன்ற முகத்தினையுடையாள்.
தாம்-தாமம்; இடைக்குறை.
-
10. மற்றுமெண் ணாயி ரம்பேர் மன்னனுக் கினிய மாதர்
வெற்றிவேல் விழியி னாரும் வேந்தனு மினிய போகம்
உற்றுடன் புணர்ந்து வின்பத் துவகையு ளழுந்தி யங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோற் செலவிய காலத் தன்றே
வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்
-
11. இஞ்சிசூழ் புரத்து மேற்பா லிலங்கிய விபுல மென்னும்
மஞ்சிசூழ் மலையின் மீது வரவீர நாதர் வந்து
இஞ்சிமூன் றிலங்கும் பூமி யேழிறை யிருக்கை வட்டம்
அஞ்சிலம் பார்க ளாட வமரருஞ் சூழ்ந்த வன்றே.
-
12. வனமிகு வதிச யங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்க ளேந்தி நன்னகர் புகுந்தி ராசன்
மனையது மதிற்க டந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்தி றைஞ்சி மாமுர சறைக வென்றான்.
அரசனை வணங்கி, நிகழ்ந்தது கூறினான். உடனே அரசன் மனமகிழ்வுடன் முனிவரை எண்ணினான். அவரைக் காணும் பொருட்டுத் தான் புறப்படும் செய்தி குறித்து முரசறையுமாறு கட்டளை பிறப்பித்தான். (12)
மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்
-
13. இடிமுர சார்ப்பக் கேட்டு மியம்பிய வத்தி னத்தின்
படுமத யானை தேர்மா வாள்நாற் படையுஞ் சூழக்
கடிமலர் சாந்து மேந்திக் காவலன் றேவி யோடுங்
கொடிநிரை பொன்னே யிற்குக் குழுவுடன் சென்ற வன்றே.
-
14. பொன்னெயிற் குறுகிக் கைம்மாப் புரவல னிழிந்துட் புக்கு
நன்னிலத் ததிச யங்கள் நரபதி தேவி யர்க்குப்
பன்னுரை செய்து காட்டிப் பரமன்றன் கோயி றன்னை
இன்னியல் வலங்கொண் டெய்தி யீசனை யிறைஞ்சி னானே.
-
15. நிலமுறப் பணிந்தெ ழுந்து நிகரிலஞ் சினையின் முற்றிக்
கலனணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலிற் பொங்கி
நலமுறு தோத்தி ரங்கள் நாதன்றன் வதன நோக்கிப்
பலமன மின்றி யொன்றிப் பலதுதி செப்ப லுற்றான்.
வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்
வேறு
-
16. பொறியொடுவல் வினைவென்ற புனித னீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போத னீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்னெயிலுண் மன்னியபுங் கவனு நீயே
அறவிபணி பணவரங்கத் தமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை யகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை யாளும்
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
-
17. கஞ்சமலர் திருமார்பிற் றரித்தாய் நீயே
காலமொரு மூன்றுணர்ந்த கடவு ணீயே
பஞ்சாத்தி தானுரைத்த பரம னீயே
பரமநிலை யொன்றெனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் லுலகுதொழுந் தூய னீயே
தொல்வினையெல் லாமெரித்த துறவ னீயே
செஞ்சொற் பாவையை நாவிற் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானெனுந் தீர்த்த னீயே.
மேலான முத்தி நிலையைச் சேர் எனக் கட்டளையிட்டவன் நீதான்.உறங்காது யோகம் செய்து வாழும் நல்ல துறவியருலகம் தொழும் தூயோன் நீதான்.பண்டைய வினைகள் எல்லாம் சேராமல் பொசுக்கிய துறவோன் நீதான்.செஞ்சொற்பாவையாகிய கலைமகளை நாவில் கொண்டவன் நீதான்.சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தூயோன் நீதான். (17)
-
18. அறவனீ யமலனீ யாதி நீயே
ஆரியனீ சீரீயனீ யனந்த னீயே
திரிலோக லோகமொடு தேய னீயே
தேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே
எரிமணிநற் பிறப்புடைய யீச னீயே
இருநான்கு குணமுடைய யிறைவ னீயே
திரிபுவனந் தொழுதிறைஞ்சுஞ் செல்வ னீயே
சிரீவர்த்த மானமெனுந் தீர்த்த னீயே.
-
19. முனிவர்தமக் கிறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வனெனு முத்த னீயே
இனிமையா னந்தசுகத் திருந்தாய் நீயே
இயலாறு பொருளுரைத்த வீச னீயே
முனிவுமுத லில்லாத முனைவ னீயே
முக்குடையின் கீழமர்ந்த முதல்வ னீயே
செனித்திறக்கு மூப்பி றப்புந் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
-
20. நவபதநன் னயமாறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்திசைந்த னாத னீயே
உவமையிலா வைம்பதமு முரைத்தாய் நீயே
உத்தமர்த மிருதயத்து ளுகந்தாய் நீயே
பவமயமா மிருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலையமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேச னீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
ஒன்பது பதங்களையும் ஆறு நயங்களையும் சொன்னவன் நீ.நல்ல முனிவர்களின் மனத்தில் பொருந்தியுறையும் தலைவனும் நீதான்.ஒப்புமை சொல்ல இயலாத ஐந்து பதவிகளையும் சொன்னவன் நீதான்.உத்தமராம் தூயோரின் இதய கமலத்துள் அமர்ந்து மகிழ்விக்கின்றவன் நீயே.பிறப்பு மயமாக ஆக்கும் நல்வினை தீவினை என்னும் இருவினை நிலையையும் விளக்கிச் சொன்னவனும் நீதான்.மேலான நிலையில் அமர்ந்துள்ள இறைவனும் நீதான்.மங்கலமாம் சிவமயமாய் நின்ற ஒளிதிகழ் தேசத்து இருப்பவனும் நீயே.சிரீவர்த்தமானன் என்னும் புனிதன் நீதான். (20)
வேறு
-
21. துதிகள் செய்துபின் றூய்மணி நன்னிலத்
ததிகொள் சிந்தையி னம்பிறப் பணிந்துடன்
நெதியி ரண்டென நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.
-
22. சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவ னன்மொழி யிப்பொரு ளுட்கொண்டு
அறைய மர்ந்துயிர்க் கறமழை யைப்பெயுந்
துறவ னற்சரண் டூய்தி னிறைஞ்சினான்.
தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்
-
23. மற்றம் மாமுனி யேர்மல ராம்பதம்
உற்று டன்பணிந் தோங்கிய மன்னவன்
நற்ற வர்க்கிறை யானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்த னிறைஞ்சினான்.
-
24. இருக ரத்தி னிறைஞ்சிய மன்னனும்
பொருக யற்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவஞ் சனமுனி வர்க்குரை
இருவ ருமியைந் தின்புறக் கேட்டபின்.
நாக பஞ்சமி கதையுரைக்க மன்னன் வேண்டுதல்
-
25. சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே.
கௌதமர் உரைத்த பஞ்சமி கதை
மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்
-
26. நாவலந் தீவி னற்பர தத்திடை
மாவலர் மன்னர் மன்னு மகதநற்
கூவுங் கோகிலங் கொண்மதுத் தாரணி
காவுஞ் சூழ்ந்த கனக புரம்மதே.
-
27. அந்ந கர்க்கிறை யான சயந்தரன்
நன்ம னைவிவி சாலநன் னேத்திரை
தன்சு தன்மதுத் தாரணி சீதரன
நன்க மைச்ச னயந்தர னென்பவே.
வாசவன் காட்டிய படத்துரு மாதரைச் சயந்தரன்
யார் என வினாவுதல்
-
28. மற்றுந் தேவியர் மன்னுமெண் ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துறு கின்றநாள
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்
துற்ற மாதர் படத்துருக் காட்டினான்.
-
29. மன்ன னோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரி யோகி ளர்கார் மாதரோ
இன்ன ரூபமிக் காரிது வென்றலும்
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான்.
வாசவன் மறுமொழி
-
30. சொல்ல ரியசு ராட்டிர தேசத்துப்
பல்ச னநிறை பரங்கிரி யாநகர்
செல்வன் சிரீவர்மன் றேவியுஞ் சிரீமதி
நல்சு தையவள் நாமம் பிரிதிதேவி.
சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்தரசியாக்குதல்
-
31. அவ்வ ணிகன வளுடை ரூபத்தைச்
செவ்விதிற் செப்பச் சீருடை மன்னனும்
மௌவ லங்குழன் மாதரைத் தானழைத்துத்
தெய்வ வேள்வியிற் சேர்ந்து புணர்ந்தனன்.
-
32. மன்ன னின்புற்று மாதேவி யாகவே
நன்மைப் பட்ட நயந்து கொடுத்தபின்
மன்னு மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன வாற்றி னியைந்துடன் செல்லுநாள்
பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு
-
33. வயந்த மாடவே மன்னனு மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுட்
பெயர்ந்து பல்லக்கி னேறிப் பிரிதிதேவி
கயந்த னீரணி காண்டற்குச் சென்றநாள்.
-
34. வார ணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வாரணி கொங்கை யாரவ ளென்றலும்
ஏர ணிம்முடி வேந்தன்மா தேவியென்று
தார ணிகுழற் றாதி யுரைத்தனள்.
வழியில் தனக்கு முன்பாக யானையின் மீது அமர்ந்து செல்லுகின்ற கச்சணிந்த முலையுடையாளாகிய மங்கை யார் என்று பிரிதிதேவி வினவினாள். ‘அழகிய திருமுடியணிந்த அரசனின் மாதேவியே அவள்'' என்று மலர் மாலை சூடிய கூந்தலுடையாளாகிய தோழி உரைத்தாள்.
பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்
வேறு
-
35. வேல்விழி மாது கேட்டு விசாலநேத் திரையோ வென்னைக்
கான்மிசை வீழ வெண்ணிக் காண்டற்கு நின்றா ளென்று
பான்மொழி யமிர்த மன்னாள் பரம னாலைய மடைந்து
நூன்மொழி யிறைவன் பாதம் நோக்கிநன் கிறைஞ்சி னாளே.
ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்
வேறு
-
36. கொல்லாத நல்விரதக் கோமானினைத் தொழுதார்
பொல்லாக் கதியறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற் கெளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கு மியன்முனியைத் தான்பணித்தாள்.
முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்
-
37. பணிபவட்கு நன்குரையிற் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நற்றவமு மாமோ வெனக்கென்றாள்
கணிதமிலாக் குணச்சுதனைக் கீர்த்தியுட னேபெறுவை
மணிவிளக்க மேபோன்ற மாதவனுந் தானுரைத்தான்,
-
38. நின்றசனந் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை யறவுரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமனடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை யவதரித்தாற் போன்மகிழ்ந்தாள்.
நீண்ட நெடுங்காலம் தவம் புரிந்து, பின்பு அறவுரைகள் மிகுதியாய்க் கேட்டு, விதிவென்ற பரமனாகிய முனிவனின் திருவடிகளைப் பிரிதிதேவி தன்னுடன் நிற்கும் தோழியருடன் குற்றம் அறப் பணிந்து, அன்றுதானே புத்திரனைப் பெற்றாற்போலப் பெருமகிழ்வு கொண்டாள்.
தோழியருடன் பிரிதிதேவி அரண்மனை புகுதல்
வேறு
-
39. நற்றவ னுரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுட னுணர்ந்து நல்ல பாசிழைப் பரவை யல்குல்
உற்றதன் குழலி னாரோ டுறுதவன் பாதந் தன்னில்
வெற்றியி னிறைஞ்சி வந்து வியன்மனை புகுந்தி ருந்தாள்
(முதல் சருக்கம் முற்றும்)
-------------
இரண்டாஞ் சருக்கம்
சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்
-
40. வனவிளை யாட லாடி மன்னன் றன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காத லாலே
புனலினீ யாட லின்றிப் போம்பொருட் புகல்க வென்ன
கனவரை மார்பன் கேட்பக் காரிகை யுரைக்கு மன்றே.
பிரிதிதேவி-பிரத்துவீதேவி. கனவரை-பொன்மலை, மேருமலை.
41. இறைவனா லயத்துட் சென்று விறைவனை வணங்கித் தீய
கறையிலா முனிவன் பாதங் கண்டடி பணிந்து தூய
அறவுரை கேட்டே னென்ன வரசன்கேட் டுளம கிழ்ந்து
பிறைநுதற் பேதை தன்னாற் பெறுசுவைக் கடலு ளாழ்ந்தார்.
பிரிதிதேவி கண்ட கனவு
-
42. இருவரும் பிரித லின்றி யின்புறு போகந் துய்த்து
மருவிய துயில்கொள் கின்றார் மனோகர மென்னும் யாமம்
இருண்மனை இமிலே றொன்று மிளங்கதிர் கனவிற் றோன்றப்
பொருவிலாட் கண்டெ ழுந்து புரவலர்க் குணர்த்தி னாளே.
சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்
-
43. வேந்தன்கேட் டினிய னாகி விமலனா லயத்துட் சென்று
சேந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கி றைஞ்சிக் கனாப்பய னுவல வென்றான்
ஏந்திள முலையி னாளு மிறைவனு மிகுந்து கேட்டார்.
முனைவனை இறைஞ்ச, அதாவது வணங்கிக் கண்ட கனாவினை உரைக்க, வென்றான் அக் கனாப்பயன் நுவல, இருவரும் இருந்து கேட்டார் என்று முடிவு கொள்ளுதல் பொருத்தமாம். வென்றான்-ஐம்புலனையும் அடக்கி வெற்றிகொண்ட சினாலய முனிவர்.
புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்
-
44. அம்முனி யவரை நோக்கி யருந்துநற் கனவு தன்னைச்
செம்மையி னிருவர் கட்குஞ் சிறுவன்வந் துதிக்கு மென்றுங்
கம்பமின் னிலங்க ளெல்லாங் காத்துநற் றவமுந் தாங்கி
வெம்பிய வினைய றுத்து வீடுநன் கடையு மென்றார்.
‘இமிலேற்றைக் கண்டதால் உங்கட்கு இனிய புதல்வன் ஒருவன் பிறப்பான். இளங்கதிரைக்காண்டலால் அவன் இப்பாரெலாம் அடக்கியாண்டு பகரருந் தவந்தாங்கி இருவினையறுத்து வீடுபேறடைவான்’ என்றருளினார். அதைக் கேட்ட அரசன், ‘மூத்தாள் புதல்வன் இருக்க இளையாள் புதல்வனுக்கு அரசுரிமை உண்டாகுமோ?’ என்று ஐயுற்று, மீண்டும் முனிவரை வணங்கிக் கேட்கலானா
கம்பமில் நிலங்கள் எல்லாம் காத்தல்-குடிகள் எல்லாம் அச்சம் முதலியவற்றால் நடுங்குதலின்றி நாட்டை அமைதி நிலவ அரசாள்கை. கம்பம்-நடுக்கம்.
புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்
-
45. தனையன்வந் துதித்த பின்னைத் தகுகுறிப் புண்டோ வென்று
புனைமல ரலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமினக் குறிக ளுண்டென் னேர்மையிற் கேட்பி ராயின்
தினையனைப் பற்று மில்லாத் திகம்பர னியம்பு கின்றான்.
திகம்பரன்-(திக்-அம்பரா)-திசையே ஆடையாக வேறு ஆடை அணியாது வாழும் சமண
முனிவன்.
திகம்பர முனிவரின் மறுமொழி
வேறு
-
46. பொன்னெயிலுள் வீற்றிருக்கும் புனிதன் றிருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தா னீங்குந் திருக்கதவம்
நன்னாக வாவிதனின் னழுவப் பதமுண்டாம்
மன்னாக மாவினொடு மதமடக்கிச் செலுத்திடுவான்.
-
47. அருள்முனி யருளக்கேட்டு வரசன்றன் றேவிதன்னோ
டிருவரு மிறைஞ்சியேத்தி யெழின்மனைக் கெழுந்துவந்து
பருமுகிற் றவழுமாடப் பஞ்சநல் லமளிதன்னிற்
திருநிகர் மாதுமன்னன் சேர்ந்தினி திருக்குமந்நாள்.
திரு-திருமகள். திருநிகர் மாது-திருமகளுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க பிரிதிதேவி. (8)
பிரிதிதேவி கருக் கொள்ளுதல்
வேறு
-
48. புண்டவழ் வேற்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்ணினி துண்ண வெண்ணு மைந்தன்பூ வலய மாளும்
பண்ணுகக் கிளவி வாயிற் பரவிய தீருஞ் சேரும்
கண்ணிய மிச்ச மின்னைக் கழித்திடு முறுப்பி தாமே.
புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்
-
49. திங்க ளொன்பான் நிறைந்து செல்வனற் றினத்திற் றோன்றப்
பொங்குநீ்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் லுவகை யாகித்
தங்குபொன் னறைதி றந்து தரணியுள் ளவர்க்குச் சிந்திச்
சிங்கநேர் சிறுவ னாமம் சீர்பிரதா பந்த னென்றார்.
ஒன்பது மாதமும் நிறைந்து ஓர் நன்னாளில் திருக்குமரன் அவதரித்தான். சந்திரனைக் கண்ட கடல்போல மன்னன் உளம் பூரித்து, உவகையடைந்து, தன் பொன் அறை திறந்து, தரணியிலுள்ள பலருக்கும் தானம் செய்து புத்திர உற்சவம் கொண்டாடினான். சிங்கம் போலுந்திறல் வாய்ந்த அக் குமரனுக்குச் சிறப்பாகிய பிரதாபந்தன் எனப் பெயரிட்டழைத்தனர்.
பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்
-
50. பிரிதிவிழ் தேவி யோர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநற் பரமன் கோயி லன்புடன் போக வெண்ணி
விரிநிற மலருஞ் சாந்தும் வேண்டிய பலவு மேந்திப்
பரிவுள தனையற் கொண்டு பாங்கினாற் சென்ற வன்றே.
ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்
-
51. சிறுவன்றன் சரணந் தீண்டச் சினாலயங் கதவு நீங்கப்
பிறைநுதற் றாதி தானும் பிள்ளைவிட் டுட்பு குந்தாள்
நறைமலர் வாவி தன்னு ணற்சுதன் வீழக் காணாச்
சிறையழி காதற் றாயுஞ் சென்றுடன் வீழ்ந்தா ளன்றே.
-
52. கறைகெழு வேலி னான்றன் காரிகை நீர்மே னிற்பப்
பிறையெயிற் றரவின் மீது பெற்றிருந் தனையற் கண்டு
பறையிடி முரச மார்ப்பப் பாங்கினா லெடுத்து வந்து
இறைவனை வணங்கி யேத்தி யியன்மனை புகுந்தா னன்றே.
நாககுமாரன் எனப் பெயர் பெற்றது
-
53. நாகத்தின் சிரசின் மீது நன்மையிற் றரித்தென் றெண்ணி
நாகநற் குமர னென்று நரபதி நாமஞ் செய்தான்
நாகநே ரகலத் தானை நாமகட் சேர்த்தி யின்ப
நாகவிந் திரனைப் போல நரபதி யிருக்க மந்நாள்.
-
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன்
மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங்
குமரியைப் புணர்க்க லுற்றார். (நாமகள் 339)
அரும் பொனு மணியு முத்துங்
காணமுங் குறுணி யாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப்
பைம்பொன்செய் தவிசி னுச்சி
இருந்துபொன் னோலை செம்பொ
னூசியா லெழுதி யேற்பத்
திருந்துபொற் கண்ணி யார்க்குச்
செல்வியைச் சேர்த்தி னாரே. (நாமகள் 340)
கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்
-
54. கின்னரி மனோக ரீயென் கெணிகைநற் கன்னி மாரும்
அன்னவர் தாயும் வந்தே யரசனைக் கண்டு ரைப்பார்
என்னுடைச் சுதையர் கீத மிறைவநின் சிறுவன் காண்க
என்றவள் கூற நன்றென் றினிதுடன் கேட்கின்றாரே.
-
55. இசையறி குமரன் கேட்டே யிளையவள் கீத நன்றென்
றசைவிலா மன்னன் றானு மதிசய மனத்த னாகித்
திசைவிளக் கனையாள் மூத்தாள் தெரிந்துநீ யென்கொ லென்ன
வசையின்றி மூத்தா டன்னை மனோகரி நோக்கக் கண்டேன்.
நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்
-
56. பலகல மணிந்த வல்குற் பஞ்சநற் சுகந்த னீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரற் கீந்தாள்
அலங்கல்வேற் குமரன் றானு மாயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்தின்பக் கடலு ளாழ்ந்தார்.
நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்
-
57. நாகமிக் கதங்கொண் டோடி நகர்மாட மழித்துச் செல்ல
நாகநற் குமரன் சென்று நாகத்தை யடக்கிக் கொண்டு
வேகத்தின் விட்டு வந்து வேந்தநீ கொள்க வென்ன
வாகுநற் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் ளென்றான்.
-
58. மற்றோர்நாட் குமரன் றுட்ட மாவினை யடக்கி மேற்கொண்
டுற்றவூர் வீதி தோறு மூர்ந்துதீக் கோடி யாட்டி
வெற்றிவேல் வேந்தற் காட்ட விழைந்துநீ கொள்க வென்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்திற் சேர்த்தி னானே.
நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்
-
59. அறவுரை யருளிச் செய்த வம்முனி குறித்த நான்குந்
திறவதி னெய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறுந் தேர்மா புகழ்பெற வூர்ந்து மூன்றாம்
பிறையது போல்வ ளர்ந்து பீடுடைக் குமர னானான்.
விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்
-
60. தூசுநீர் விசாலக் கண்ணி சுதனைக்கண் டினிது ரைப்பாள்
தேசநற் புரங்க ளெங்குந் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசொணா வகையிற் கேட்டேன் பெருந்தவ மில்லை நீயும்
ஏசுற விகழொன் றின்றி யினியுனைக் காக்க வென்றாள்.
சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்
-
61. சிரிதரன் கேட்டு நெஞ்சிற் செய்பொரு ளென்னென் றேகி
குறிகொண் டாயி ரத்தினோரைக் கொன்றிடு மொருவ னாகச்
செறியுமைஞ் ஞூறு பேருஞ் சீர்மையிற் கரத்தி னாரை
யறிவினிற் கூட்டிக் கொண்டு வமர்ந்தினி திருக்கு மந்நாள்.
நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்
வேறு
-
62. குமரனுநன் மாதருங் குச்சமென்னும் வாவியுள்
மமரநீரி லாடவே வன்னமாலை குங்குமஞ்
சுமரவேந்திப் பட்டுடன் றோழிகொண்டு போகையிற்
சமையுமாட மீமிசைச் சயந்தர னிருந்ததே.
விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்
-
63. வேந்தன்பக் கங்கூறுநல் விசாலநேத் திரையவள்
போந்தனள் மனைவியாற் புணருஞ்சோரன் றன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
யேந்திழையா ணிற்பக்கண் டினிச்சுதன் பணிந்ததே.
பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்
-
64. பொய்யுரை புனைந்தவளைப் புரவலனுஞ் சீறினான்
நையுமிடை மாதரு நாகநற் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் றாங்கியே
வெய்யவேற்கண் டாயுடன் வியன்மனை யடைந்தனன்.
பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை
-
65. மன்னன்றன் தேவியை மாதேயெங்கு போனதென்
நின்னுடைப் புதல்வனீ ராடற்காணப் போனதென்
நின்னுடன் மனைதனி லீண்டினிதி னாடலென்
நந்நகர்ப் புறத்தனைய னாடனீங்க வென்றனன்.
தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்
-
66. அரசனுரைத் தேகினா னகமகிழ்வு மின்றியே
சிரசிறங்கித் துக்கமாய்ச் சீர்கரத் திருந்தனள்
விரகுநற் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசனுரை சொல்லக்கேட் டானைமிசை யேறினான்.
-
67. வாத்திய முழங்கவு மதவாரண மடக்கவும்
ஏத்தரிய வீதிதொறு மீடில்வட்ட சாரியும்
பார்த்தரிய நடனமும் பல்லியங்க ளார்ப்பவே
சீற்றமொ டுலாச்செலச் சீரரசன் கேட்டனன்.
பல வாத்தியங்கள் முழங்கவும் மதமிக்க யானையை அடக்கவும் வீதிதோறும் கண்டோர் வியந்து, புகழ்தற்கரிய நிகரற்ற வட்டசாரியோட்டிக் காட்டியும், பல்லியம் முழங்கப் பகுத்துணர்தற்கரிதாகிய நடனமாடலும் கண்ட சயந்தர மன்னன் இங்ஙனம் சீற்றத்தோடு நகருலாச் செல்லவல்லோன் யாவன் என்று வாயிற்காவலனை விரைந்து கேட்டான். (28)
-
68. நன்னடியார் சொல்லினர் நாகநற் குமரனென்
இன்னுரையை மீறின னினியவன் மனைபுகுந்து
பொன்னணிக ணற்பொரு ணாடிமிக் கவர்கொள
என்றரசன் கூறலு மினப்பொருள் கவர்ந்தனர்.
நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்
-
69. ஆடுவா ரணமிசை யண்ணல்வந் திழிதர
நீடுமா ளிகையடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடுஞ்சூது மனைபுகுந் தரசர்தம்மை வென்றபின்
கூடுமா பரணமே குமரன் கொண்டி யேகினான்.;
அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்
-
70. அரசர்க ளனைவரு மதிகரா சனைத்தொழ
அரவமணி யாரமு மான முத்து மாலையும்
கரமதிற் கடகமுங் காய்பொற்கே யூரமும்
வெரிமணிக ளிலதைவேந் தென்னவிக் கூற்றென.
நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்
-
71. சூதினாற் செயித்துநின் சுதனணிகள் கொண்டனன்
சூதிலாட வென்னுடன் சுதனழைப்ப வந்தபின்
சூதினிற் றுடங்கிநற் சுதனுந்தந்தை யன்பினிற்
சூதிரண்டி லாட்டினுஞ் சுதன்மிகச் செயித்தனன்.
தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு
ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்
-
72. இனியசூதி லாடலுக் கிசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை யியல்பினாற் கொடுத்துடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருட் கொடுத்தபின்
அணியரச ராரமு மவரவர்க் களித்தனன்.
புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்
-
73. மன்னவன்றன் னேவலான் மாநகர்ப் புறத்தினின்
நன்னகர் சமைத்தினிதின் நற்சுத னிருக்கவென்
றன்னகரி னாமமு மலங்கரிய புரமெனத்
தன்னகரின் மேவுங்பொற் றாரணிந்த காளையே.
(இரண்டாம் சருக்கம் முற்றும்)
மூன்றாம் சருக்கம்
கவிக்கூற்று
-
74. அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர்வந்து சேர்ந்தது கூற லுற்றேன்.
நாககுமாரனின் தோழர் வரலாறு
-
75. பாரணி சூர சேனம் பண்ணுதற் கரிய நாட்டுள்
ஊரணி கொடிக ளோங்கு முத்தர மதுரை தன்னில்
வாரணி கொங்கை மார்க்கு மாரனேர் செயவர் மாவின்
சீரணி தேவி நாமஞ் செயவதி யென்ப தாகும்.
வியாள-மாவியாளரின் தோற்றம்
-
76. வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாளமா வியாள ரென்னுஞ்
சேர்ந்திரு புதல்வர் தோன்றிச் செவ்வியாற் செல்லு நாளில்
காந்திநற் றவத்தோர் வந்தார் கடவுணேர் தூம சேனர்
வேந்தன்வந் தடிவ ணங்கி விரித்தொன்று வினவி னானே.
-
77. என்னுடையப் புதல்வர் தாமு மினியர சாளு மொன்றோ
அன்னியன் சேவை யொன்றோ வடிகணீ ரருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமு மொருவனைச் சேவை பண்ணும்
என்றவர் குறியுஞ் சொல்ல யெழின்முடி புதல்வர்க் கீந்தான்.
வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்
-
78. மன்னன்போய் வனம டைந்து மாமுனி யாகி நிற்பப்
பின்னவ ரமைச்சன் றன்மேற் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்னிறை தேடிப் போந்தார் தரைமகட் டிலதம் போலும்
பன்னக நகர நேராம் பாடலி புரம தாமே.
பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்
-
79. நன்னகர்க் கிறைவ னல்ல னாமஞ்சிரீ வர்ம னாகுந்
தன்னவன் றேவி பேருந் தக்கசிரீ மதியா மம்பொற்
கிண்ணம்போல் முலையாள் புத்ரி கேணிகாசுந் தரியென் பாளாம்
விண்ணுறை தேவர் போல வியாளமா வியாளர் வந்தார்.
-
80. மன்ன னைக்கண் டிருப்ப மாவியாளன் றகமை கண்டு
தன்னுடையப் புதல்வி தன்னைத் தானவற் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரி வியாள னுக்கு
மன்னியற் கொடுப்ப மன்ன ரிருவரு மின்புற் றாரே.
நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்
-
81. சிறுதினஞ் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநற் குமரற் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணுஞ் சேரவே மறையக் கண்டு
சிறியன்யா னின்னா னென்றான் செல்வனு மகிழ்வுற் றானே.
சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால்
அடித்து மாய்த்தல்
-
82. செல்வனைக் கொல்வ தென்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்த தென்ன வள்ளலை வதைக்க வென்றார்
கொல்களி யானைக் கம்பங் கொண்டுடன் சாடி னானே.
சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும்,
அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்
-
83. சேனைதன் மரணங் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேற் குமரன் றோன்றி யவனும்வந் தெதிர்த்த போது
மானவேன் மன்னன் கேட்டு மந்திரி தன்னை யேவ
கோனவர் குமரற் கண்டு கொலைத் தொழி லொழித்த தன்றே.
மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி
-
84. நாகநற் குமரற் கண்டு நயந்தர னினிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டவன் வந்தா னென்ன
போகநீ தேசத் தென்று புரவலன் சொன்னா னென்ன
ஆகவே யவன்முன் போகி லவ்வண்ணஞ் செய்வ னென்றான்.
நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்
-
85. நயந்தரன் சென்று ரைப்பா னல்லறி வின்றி நீயே
செயந்தனி லொருவன் கையிற் சேனைதன் மரணங் கண்டும்
நயந்தறி யாத நீயே நன்மனை புகுக வென்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்திற் சென்ற வன்றே.
அதை நிதானித்து அறியும் நுண்ணறிவு நினக்கு இல்லை, இன்னும் பொர விழைகின்றாய், பொருதால் வறிதே பொன்றுவாய். ஆதலால் விரைந்து நின் மனைக்கு ஏகிவிடுவாயாக‘ எனக் கடிந்துரைத்தான். சிரீதரனும் பயந்தவனாய்த் தன் சேனையோடும் சென்று மாளிகை அடைந்தான். (12)
நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்
-
86. தந்தையா லமைச்சன் சொல்லத் தானுந் தன்றாய்க் குரைத்து
தந்திமேன் மாதர் கூடத் தோழனுந் தானு மேறி
நந்திய வியாள னன்னூர் மதுரை யிற்புக் கிருந்து
அந்தமி லுவகை யெய்தி அமர்ந்தினி தொழுகு நாளில்.
ஓர்நாள் நாககுமாரன் கடைத்தெரு வளப்பத்தைக் காணப் புறப்பட்டான். அவனை நோக்கி, தேவதத்தை, ஐயனே! கன்னியா குச்சம் எனும் நகர்க்கதிபதியாகிய மன்னன் செயவர்மன், மனைவி குணவதி, இவர்கட்குப் புத்திரி சுசீலை. இப் பெண்ணைச் சிம்மபுர மன்னன் அரிவர்மனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்க ஒரு மனப்பட்டனர். அதைக் கேள்வியுற்ற இந் நகர்க்கரசன் துட்டவாக்கியன், அப்பெண்ணைத் தான் மணக்க விரும்பிச் சென்று, அவளைக் கவர்ந்து கொடுவந்து சிறையிட்டுள்ளான். அவளோ விருப்பமின்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள். நீ அதைக் கண்டு ஐயுறல் வேண்டா. நின் காரியத்தைக் கடைப்பிடித்துப் போய் வருவாயாக‘ என்றாள்.
அதைக் கேட்ட நாககுமாரன் ஆங்கடைந்து காவல்புரியும் போர்வீரர்களை அச்சமுறுத்தித் துரத்திவிட்டுத் தன் வீரர்களை வைத்து அவளுக்குப் புகலிடம் தந்தான். அதனால் துட்டவாக்கியன் வெகுண்டு நாககுமாரன் மேல் போர் தொடுக்கலானான். அப் போரில் தனக்கு எதிரியாக. வியாளன் வரக் கண்டான். உடனே துட்டவாக்கியன் மந்திரி புத்திரனாகிய எனக்குத் தன் அரசியலையே அளித்த வள்ளல் வியாளனல்லவா என எண்ணி அந் நன்றி மறவாமல் அக்கணமே அவன் பொற்கழல் தொழுதான். வியாளனும் அவனுக்குத் தன் தலைவனாகிய நாககுமாரனை அறிமுகப் படுத்தினான். அவனும் நாககுமாரனை வணங்கி நட்புடையவனானான். சுசீலை என்னும் பெண்மணியை முதலில் விழைந்த அரிவர்மனுக்கே உரிமையாக்கினான்.* (13)
மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்
வேறு
-
87. மன்னவ குமரனு மன்னனுந் தோழனும்
அந்நகர்ப் புறத்தினி லாடன் மேவலின்
இன்னிசை வீணைவேந் திளையரைஞ் நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக் கண்ண லுரைத்தனன்.
-
88. எங்குளிர் யாவர்நீ ரெங்கினிப் போவதென்
றங்கவர் தம்முளே யறிந்தொரு வன்சொலுந்
தங்களூர் நாமமுந் தந்தைதாய் பேருரைத்
திங்கிவ ரென்கையின் வீணைகற் பவர்களே.
-------------------
* இப்பாடலின் இறுதிப் பகுதியுரையில் புதுச் செய்திகள் உள. ஆனால், அவற்றிற்குரிய மூலம் இல்லை. வட நூல் காவியம் பற்றியோ பிறவரலாறுகள் கொண்டோ உரையாளர் இங்கு எழுதுகின்றார்.
-------------------
வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி
வேறு
-
89. நந்துகாம் பீரநாட்டி னகருங் காம்பீர மென்னு
நந்தன ராசன் றேவி நாமந் தாரணியாம் புத்திரி
கந்தமார் திரிபுவ னாரதி கைவீணை யதனிற் றோற்று
என்தம ரோடுங் கூட வெங்களூர்க் கேறச் சென்றோம்.
திரிபுவனாரதியை வீணையினால் வென்று
நாககுமாரன் நன்மணங் கொள்ளல்
-
90. வெற்றிவேற் குமரன் கேட்டு வியாள னுந் தானுஞ் சென்று
விற்புரு வதனத் தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை யவடன் காமக் கடலிடை நீந்து நாளில்
உற்றதோர் வணிக னைக்கண் டுவந்ததி சயத்தைக் கேட்டான்.
வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி
-
91. தீதில்பூந் திலக மென்னுஞ் சினாலய மதனின் முன்னிற்
சோதிமிக் கிரணந் தோன்றுஞ் சூரிய னுச்சி காலம்
ஓதிய குரல னாகி யொருவனின் றலறு கின்றான்
ஏதுவென் றறியே னென்றா னெரிமணிக் கடகக் கையான்.
வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்
-
92. குன்றெனத் திரண்ட தோளான் குமரனுங் கேட்டுவந்து
சென்றந்த வால யத்திற் சினவரற் பணிந்து நின்று
வென்றந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்னந்த மண்ட பத்தின் முகமலர்ந் தினிதி ருந்தான்.
குன்றம்போல் திரண்ட தோள்வலிவுடைய நாககுமாரன் அதைக் கேட்டு அகமகிழ்ந்து, அவ்வதிசயத்தைக் காண விரும்பிச் சென்று, அவ்வாலயத்திலுள்ள அருகனை வணங்கித் தொழுது நின்று கொண்டு பல துதிகள் செய்து, முகமலர்ச்சியோடு அவன் வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டு ஆங்குள்ள முன் மண்டபத்தில் காத்திருந்தான். (19)
வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்
-
93. பூசலிட் டொருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக் கின்ற தென்ன வொருதனி நின்ற நீயார்
ஆசையென் மனைவி தன்னை யதிபீம வசுரன் கொண்டு
பேசொணா மலைமு ழஞ்சுட் பிலத்தினில் வைத்தி ருந்தான்.
-
94. இரம்மிய வனத்துள் வாழ்வே னிரம்மிய வேட னன்பேன்
விம்முறு துயர்சொற் கேட்டு வீரனக் குகைகாட் டென்னச்
செம்மையிற் சென்று காட்டச் செல்வனுஞ் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னி லண்ணலு முவந்து நின்றான்.
வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்
-
95. வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநற் கிராதன் றேவி தனைவிடு வித்த பின்புச்
சந்திர காந்தி வாளுஞ் சாலமிக் கமளி தானுங்
கந்தநற் காம மென்னுங் கரண்டகங் கொடுத்த தன்றே.
கரண்டகம்-சிறு செப்பு, சிமிழ். இங்கே அரிய ஆபரணம் அடங்கிய சிறு பெட்டியைக் குறிக்கும், அதாவது அருங்கலச் செப்பு. (22)
வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்
-
96. அங்குநின் றண்ணற் போந்து வதிசயங் கேட்ப வேடன்
இங்குள மலைவா ரத்தி லிரணிய குகையுண் டென்னக்
குங்கும மணிந்த மார்பன் குமரன்கேட் டங்குச் சென்றான்
அங்குள யியக்கி வந்து வடிபணிந் தினிது சொல்வாள்.
அக் கணத்தே அவன் செவியில் முரசொலி ஒன்று கேட்டது. அவன் அதை அறியவேண்டி எங்களில் ஒருத்தியாகிய அவலோகினி எனும் வித்தையை ஓதினான். அதன் சாதனத்தால் அம்முரசொலி முனிசுவிரதரின் கேவலோத்பத்தியில் தேவர்களால் முழக்கப்பட்டது எனத் தேர்ந்து சென்று அறவுரை கேட்டு, வாழ்க்கையில் வைராக்கியங் கொண்டு துறவு வேண்டினான்.
‘யாங்கள் அனைவரும் ஒன்றுகூடி, நீ எங்களை வேண்டித் தவம் புரிந்தாய், எங்கள் ஏவலை ஏற்றுக் கொள்கிறதுமில்லை. துறவு பூண்கிறேரே. இனி யாங்கள் யாருக்கு ஏவல் புரிதல் வேண்டும்‘ எனக் கேட்டோம். அவரும் கேவலிபாற் சென்று அறிந்து மீண்டு, ‘தெய்வங்களே! இனிவரும் நேமிதீர்த்தகரர் காலத்தில் இங்கு நாககுமாரன் எனும் ஓர் அரசிளங்குமரன் வருவான். அவனுக்கு ஏவல் செய்ம்மின்‘ எனப் பணித்தார். (23)
-
97. இனியுனக காள ரானோ மீரி ரண்டா யிரவர்
எனவவள் சொல்ல நன்றென் றினியொரு காரி யத்தின்
நினைவன்யா னங்கு வாவென் னீங்கிநற் குமரன் வந்து
வனசரன் றன்னைக் கண்டு வதிசயங் கேட்பச் சொல்வான்.
வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்
-
98. வாள்கரஞ் சுழற்றி நிற்பான் வியந்தர னொருவ னென்னக்
காலினைப் பற்றி யீர்ப்பக் கனநிதி கண்டு காவ
லாளெனத் தெய்வம் வைத்து வருகனா லையத்துட் சென்று
தோளன தோழன் கூடத் தொல்கிரி புரத்தைச் சேர்ந்தான்.
கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்
-
99. அந்நகர்க் கதிப னான வனராசன் றேவி தானு
மன்னிய முலையி னாள்பேர் வனமாலை மகணன் னாமம்
நன்னுதற் கணைவிழியை நாகநற் குமர னுக்குப்
பன்னரும் வேள்வி தன்னாற் பார்த்திபன் கொடுத்த தன்றே.
புண்ணியாசிரவ கதையில் நாககுமாரன் ஆலமரத்தின்கீழ் அமர்ந்தபோது அம் மரத்துப் பிரஹோரங்கள் (விழுதுகள்) புறப்பட அதனை ஆந்த்ரோளமாகச் (ஊஞ்சல்) செய்தனன். அப்போது அம் மரத்துக்குரியான் வந்து வணங்கித் ‘தேவனே! இக் கிரி கூட நகரத்து வனராசனுக்கும் வனமாலைக்கும் புத்திரி இலக்குமீமதி. இவளுக்குக் கணவன் யாவனொருவன் என்று அரசன் ஓர் அவதிஞானியைக் கேட்க, அவரும், ‘இவ்வாலமரம் யாருடைய சமாகமத்து ப்ராரோஹம் (கைத் திறமையால் ஊசலாட்டம்) உண்டாகுமோ அவனே பர்த்தா வாவான்‘ எனக் கூற, அதைக் கண்டு அறிவித்தற்கே என்னை விட்டனர் என்று கூறி வனராசனுக்கு அறிவித்தாள் என்று உள்ளது. (25)
----------
* கணைவிழி என்றே பாடலுள் காணப்பெறுகிறது.
-----------
புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்
-
100. தாரணி வனரா சற்குத் தாயத்தா னொருவன் றன்னைச்
சீரணி குமரன் றோழன் சிறந்தணி மாமன் கூடப்
பாரணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
யேரணி வனரா சற்கு யெழில்பெறக் கொடுத்த வன்றே.
நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்
-
101. சொல்லரு நாடி ழந்து சோமநற் பிரபன் போகி
யெல்லையிற் குணத்தின் மிக்க யெமதர ரடிவ ணங்கி
நல்லருட் சுரந்த ளிக்கு நற்றவ முனிவ னாகி
யொல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.
(மூன்றாஞ் சருக்கம் முற்றும்)
நான்காம் சருக்கம்
சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்
-
102. சுப்பிர திட்ட மெனும்புர மாள்பவன்
செப்பு வன்மை செயவர்ம ராசன்றன்
ஒப்பில் பாவையு மோவியம் போற்செம்பொன்
செப்பு நேர்முலை யாணற் செயவதி.
-
103. மக்கட் சேத்திய பேத்திய ரென்றிவர்
மிக்க செல்வத்தின் மேன்மையிற் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட் டிறைஞ்சினான்.
இவர்களுடைய மக்கள் அசேத்தியர் அபேத்தியர் என இருவர் செல்வமுஞ் செழிப்பும் மிக்கோராய் பெருமையேறி வாழுநாளில், அந் நகர்ப்புற வனத்தே பட்ச உபவாசமுடைய குணத்தால் உயர்ந்த பிகிதாஸ்வர முனிவர் வந்து தங்கி அறம் பகர்ந்தார். செயவருமன் என்னும் மன்னனும் சென்று, அவருடைய திருவடித் துணை வணங்கி இறைஞ்சினான். அசேத்தியர்-சேதிக்க முடியாதவர், அபேத்தியர்-பேதிக்க முடியாதவர். கோடிபடர். (2)
-
104. இருவ ரென்சுத ரென்னுடை ராச்சிய
மருவி யாளுமோ மற்றொரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்தறி விக்கெனத்
திருமுடி மன்ன செப்புவன் கேளென்றார்.
முனிவர் மன்னனுக்கு உரைத்தவை
-
105. புண்டிர மெனும்புரப் புரவ லன்றனைக்
கண்டிறந் துந்திடுங் காவ லன்றனை
யண்டிநற் சேவையா ராவ ராமெனப்
பண்டிறத் தவத்தவர் பண்ணுரை கேட்டபின்.
செயவர்மன் புதல்வரின் அரசாட்சி
-
106. மக்கண் மிசைநில மன்னவன் வைத்துடன்
மிக்கு ணத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி யாளுநாள்.
சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்
-
107. நல்ல ருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை யில்குண விருடிக டம்முடன்
தொல்பு கழ்ப்புரஞ் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவி னயந்திருந் தார்களே.
-
108. செயவர் மன்சுதர் சீர்நற் றவர்களை
நயம றிந்துசேர் நன்னடி யைப்பணிந்
தியம்பு மிம்முனி யிப்ப துறந்ததென்
செயந்த ரன்சுதன் சீற்றத்தி னானதே.
செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்
வேறு
-
109. என்றவ ருரையைக் கேட்டு இருவருந் துறந்து போந்து
சென்றுநற் குமரன் றன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக் காள ரானோ மென்றவர் கூற நன்றென்
குன்றுசூழ் வனசா லத்துக் குமரன்சென் றிருந்த வன்றே.
-
110. அடிமரத் திருப்ப வண்ண லந்நிழற் றிரித லின்றித்
கடிகமழ் மார்பன் றன்னைக் காத்துட னிருப்பப் பின்னும்
விடமரப் பழங்க ளெல்லாம் வியந்து நற்றுய்த் திருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுட் கோமக னிருந்த போழ்தில்.
ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத்
தலைவனாக ஏற்றுக்கொள்ளல்
-
111. அஞ்சுநூற் றுவர்கள் வந்தே யடிபணிந் தினிய கூறும்
தஞ்சமா யெங்கட் கெல்லாந் தவமுனி குறியு ரைப்ப
புஞ்சிய வனத்தி ருந்தோம் புரவல னின்னி டத்தின்
நெஞ்சிலிற் குறியன் காணா யெமக்குநீ றிறைவ னென்றார்.
கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்
-
112. அரியநல் லுரையைக் கேட்டு வவ்வணங் களிசிறந்து
உரியநல் லவர்க ளோடு முவந்துட னெழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவர னெதிர்க் கொண் டேக யவன்மனை புகுந்தி ருந்தான்.
-
113. அரிவர ராசன் றேவி யருந்ததி யனைய கற்பின்
மிருகலோ சனையென் பாளா மிக்கநன் மகடன் பேருஞ்
சுரிகுழற் கருங்கண் செவ்வாய்த் துடியிடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதன னிச்சித்துப் பெருநகர் வளைந்த தன்றே.
-
114. நாகநற் குமரன் கேட்டு நாற்படை யோடுஞ் சென்று
வேகநற் போர்க்க ளத்தில் வெற்றிகொண் டவனை யோட்டி
நாகநல் லெருத்தின் வந்து நகர்புகுந் திருப்ப மிக்க
போகமிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்த தன்றே.
நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்
-
115. வேல்விழி யமிர்தன் னாளை வேள்வியா லண்ண லெய்திக்
கால்சிலம் போசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போக மெல்லாம் பருகியின் புற்று நாளும்
நூனெறி வகையிற் றுய்த்தார் நுண்ணிடை துவள வன்றே.
ஆடவரிற் சிறந்த நாககுமாரன் வேல் போன்ற கண்களையும் அமுதம் போன்ற மொழியினையுமுடைய குணவதியோடு காமனும் இரதியும்போல நுண்ணிடை துவளவும் கால் சிலம்பு ஒலிக்கவும் கட்டித் தழுவி நாடோறும் காமநூல் விதிப்படி போக உபபோகங்களை நுகர்ந்து இன்புற்று மகிழலானான். (14)
-
116. கலையணி யல்குற் பாவை கங்குலும் பகலு மெல்லாஞ்
சிலையுயர்ந் தினிய திண்டோட் செம்மலும் பிரித லின்றி
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகரின்றிச் செல்லு நாளுள்
உலைதலி லுறுவ லீயா னூர்ச்சயந்த கிரிய டைந்தான்.
நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்
-
117. வாமனா லையத்து மூன்று வலங்கொண் டுட்புகுந் திறைஞ்சி
தாமமார் மார்பன் மிக்க தக்கநற் பூசை செய்து
சேமமா முக்கு டைக்கீ ழிருந்தரி யாச னத்தின்
வாமனார் துதிகட் சொல்ல வாழ்த்துபு தொடங்கி னானே.
முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்
வேறு
-
118. முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே.
வணங்கி வழிபடுவோர்கள் தேவராய்ப் பிறந்து தேவருலகாண்டு ஆயுள் முடிவில் வந்து இப் பூமண்டலத்திற்கு மகா மண்டலேசுவரராய்ப் பிறந்து ஆட்சி புரிந்து பெரிய வெற்றியானைப் பிடரியின் முத்தணிந்த வெண்கொற்றக்குடை நிழலையளிக்கத் தலைவராக வாழ்ந்திருப்பவ ராவார்கள். (17)
-
119. கமலமலர் மீதுறையுங் காட்சிக் கினிமூர்த்தி
யமலமலர்ப் பொற்சரணை யன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்க ளுலகத் திந்திரராய்ப் போயுதுதித்து
இமையவர்கள் வந்துதொழ வின்புற் றிருப்பாரே.
-
120. அரியா சனத்தின்மிசை யமர்ந்த திருமூர்த்தி
பரிவாக வுன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோக முந்தொழவே தேவாதி தேவருமய்
எரிபொன் னுயிர்விளங்கி யினியமுத்தி சேர்பவரே.
வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி
-
121. இணையிலா யிறைவனை யேத்தியிவ் வகையினாற்
துணையினிய தோழன்மார் சூழ்ந்துட னிருந்தபின்
கணைசிலை பிடித்தொருவன் கண்டொரோலை முன்வைத்து
இணைகரமுங் கூப்பிநின் றினிதிறைஞ்சிக் கூறுவான்.
-
122. வற்சையெனு நாட்டினுள் வான்புகழுங் கௌசம்பி
செற்றவரி னும்மிகு சூரன்சுப சந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகா வதியெனு நாமமினி தாயினாள்.
வத்சை என்னும் தேயத்து வானவர் புகழும் கௌசாம்பி நகரத்தே பகைவரினும் மிக்க வீரன் சுபசந்திரன் எனும் வேந்தன். சலியாத கற்புடைய அவன் மாதேவியும் பல நலம் பொதுளிய சுகாவதி எனும் பெயரின ளாயினாள். (21)
-
123. அன்னவர்தம் புத்திரிக ளானவேழு பேர்களாம்
நன்சுயம் பிரபையும் நாகசுப் பிரபையு
இன்பநற் பிரபையும் இலங்குசொர்ண மாலையும்
நங்கைநற் பதுமையு நாகதத்தை யென்பரே.
-
124. வெள்ளியின் மலையில் மேகவா கனன்றுரந்திடக்
கள்ளவிழ் மாசுகண் டனவன் வந்துடன்
கிள்ளையம் மொழியினாரைக் கேட்டுடன் பெறுகிலன்
வெள்ளையங் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.
-
125. வேந்தனுக் கிளையனுன்னை வேண்டியோலை யேதர
சேர்ந்தவ னளித்தவோலை வாசகந் தெளிந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துடன்
போந்தவனைக் கொன்றனன் பூவலங்கன் மார்பனே.
நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்
-
126. அபிசந் திரன்றன்புர மத்தினாக மேகியே
சுபமுகூர்த்த நற்றினஞ் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் றன்மக ளாஞ்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியாற் செல்வனெய்தி யின்புற்றான்.
-
127. நங்கைமார்க டன்னுட னாகநற் குமரனும்
இங்கிதக் களிப்பினா லிசைந்தினிப் புணர்ந்துடன்
பொங்குநகர்ப் புறத்தினிற் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன் றினுஞ் சேர்ந்தினி தாடுநாள்.
அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்
-
128. அவந்தியென்னு நாட்டினு ளானவுஞ்சை நீணகர்
உவந்தமன்ன னாமமு மோங்குஞ்செய சேனனாம்
அவன் தனன் மனைவிய ரானநற் செயசிரீ்யாஞ்
சிவந்தபொன் னிறமகட் சீருடைய மேனகி.
-
129. பாடலீ புரத்திருந்த பண்புமா வியாளனு
நாடிவந் திருந்தன னன்குவுஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டவள்
நாடியவள் போயின ணன்னிதிப் புரிசையே.
-
130. அந்நகர்விட் டேகின னானமா வியாளனும்
சென்றுதன் றமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கின னாகநற் குமரனை
இன்றிலன்றான் யாரென வென்றம்பியவ னென்னலும்.
-
131. மின்னினிடை நேரிழை மேனகி யெனவொரு
மன்மதனை யிச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரிற் செல்லலு மரிவையர் தரித்திட
மன்னனம்பு வேள்வியான் மன்னிநற் புணர்ந்தனன்.
மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்
-
132. மற்றுமொன் றுரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றிருந்த சிரீமதி யோர்ந்துநா டகந்தனில்
வெற்றிமுழ வேழ்வியம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன வள்பதியாம் பார்மிசைமே லென்றனன்.
மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்
-
133. அங்குசென்றவ் வண்ணலு மவளைவென்று கொண்டனன்
பொங்குமிக் குழலியர்ப் புணர்ந்துட னிருந்தபின்
வங்கமீது வந்தவோர் வணிகனை வினவுவான்
எங்குள வதிசய மியம்புகநீ யென்றனன்.
வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்
-
134. பொங்குமாழி யுள்ளொரு பூதிலக மாபுரம்
புங்கவன்ற னாலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமா ரைஞ்நூற்றுவர் நாடொறு மொலிசெய்வார்
அங்கதற்குக் காரணம் யானறியே னென்றனன்.
நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை
-
135. தனதுவித்தை தன்னையே தானினைக்க வந்தபின்
மனத்திசைந்த தோழரோடு வள்ளற்றீ பஞ்சென்றுநற்
கனகமய வாலையங் கண்டுவலங் கொண்டுடன்
சினனடி பணிந்துமுன் சிறந்துமிக் கிருந்தனர்.
ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்
-
136. ஒருநிரையாய் மங்கைய ரோசைசெய்யக் கேட்டபின்
திருவலங்கன் மார்பினான் சேரவழைத் தவர்களை
யருகனாலை யத்துமுன் னலறுநீங்கள் யாரெனத்
தரணிசுந் தரியவ ளவற்கிதென்று கூறுவாள்.
ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்
-
137. அரியவெள்ளி மாமலை யாடுங்கொடி யேமிடை
பிரிதிவி திலகமெங்கட் பேருடைய நன்னகர்
வரதிரட் சகனேமர் தந்தையை மருகனுக்குக்
கருதியெம்மைக் கேட்டனன் கண்ணவாயு வேகனே.
-
138. எந்தையுங் கொடாமையா லெரியென வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து வெங்களையும் பற்றியே
இந்தநல் வனத்திருந்தா னென்றவளுங் கூறலும்
அந்தவாயு வேகனை யண்ணல்வதை செய்தனன்.
வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர்
ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்
-
139. அஞ்சுநூற்று மங்கையரை யண்ணல்வேள் வியாலெய்தி
நெஞ்சிலன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்று வர்படர்க ளாளராகி வந்தனர்
தஞ்சமா யவர்தொழு தகமகிழ்ந்து செல்லுநாள்.
அதனால் இங்கிருந்தோம்‘ எனத் தஞ்சமடைய, நன்றென உளமகிழ்ந்து செல்கின்ற காலத்தே-
பிறகு காஞ்சீபுரம் அடைந்து அந்நகர் அரசன் வல்லப நரேந்திரனால் வரவேற்பளிக்கப்பட்டு, கன்னியர் தானம் முதலிய சிறப்புகளை அடைந்தான் என்கிறது வடமொழிக் காவியம். (38)
கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்
-
140. கலிங்கமென்னு நாட்டினுட் கனகமய விஞ்சிசூழ்ந்
திலங்கு ரத்னபுர மிந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திர குப்தன் றோகைசந் திரம்மதி
பெலங்கொளிவர் நன்மகட் பேர்மதன மஞ்சிகை.
-
141. நாகநற் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகன மினிதினின்று மதன்மஞ் சிகையொடுந்
தாகமிக் குடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநற் புணர்ச்சிபோல் நன்குட னிருந்தரோ.
கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்
-
142. கங்கைநீ ரணிந்திலங்குங் கங்காளநன் னாட்டினுட்
திங்கடவழ் மாடநற் றிலகபுர மன்னவன்
பொங்குமகு டம்முடி பொற்புவிசை யந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை யென்பளே.
-
143. இலக்கணை யெனுமக ளிலக்கண முடையவள்
மிக்கவண்ண லுஞ்சென்று மெய்ம்மைவேள் விதன்மையால்
அக்கணத் தவனெய்தி யவடன்போகந் துய்த்தபின்
தொக்ககாவு தன்னுளே தொன்முனிவர் வந்தரோ.
நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்
-
144. ஊற்றினைச் செறித்திடு முறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனு நன்புறப் பணிந்தபின்
யேற்றவறங் கேட்டுட னிருந்தலக் கணையின்
ஏற்றமோக மென்னென னியன்முனி யுரைப்பரே.
(நான்காம் சருக்கம் முற்றும்)
ஐந்தாம் சருக்கம்
நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு
-
145. நாவலந் தீவு தன்னுள் நன்கயி ராவ தத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோ கப்பு ரத்துக்
காவிநன் விழிமா தற்குக் காமன்விக் கிரம ராசன்
தாவில் சீர் வணிகன் நாமந் தனதத்த னென்ப தாமே.
-
146. மனைவிதன் றனதத் தைக்கு மகனாக தத்த னாகும்
வனைமலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் றேவிப்
புனைமலர்க் கோதை நல்லாட் பொற்புடை வசும திக்கு
மனையினன் மகடன் னாம மியன்நாக வசுவென் பாளம்.
-
147. நண்புறு நாக தத்த னாகநல் வசுவென் பாளை
யன்புறு வேள்வி தன்னா லவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நற்ற வத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தா ரிறைவனா லையத்தி னுள்ளே.
-
148. நாகதத் தன்சென் றந்த நன்முனி சரண டைந்து
வாகுநற் றருமங் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண் ணியங்க ளாக்கும் பூரண பஞ்ச மீயில்
ஏகனற் றினத்தி னன்று யிடர்பசி யாயிற் றன்றே.
-
149. தருமநற் றியானந் தன்னாற் றன்னுடை மேனி விட்டு
மருவினா னசோத மத்தின் வானவ னாகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந் தமர னுக்கு
மருவிய தேவி யாகி மயலுறு கின்ற வன்றே.
-
150. அங்கைந் துபல்ல மாயு வமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந் தரச னானா யினியந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி யானாள் தவமுனி யுரைப்பப் பின்னும்
எங்களுக் கந்த நோன்பு யினிதுவைத் தருள வென்றான்.
நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்
-
151. திங்கட் கார்த்திகையி லாதற் சேர்ந்தபங் குனியி லாதற்
பொங்கன லாடி யாதற் பூரண பக்கந் தன்னில்
அங்குறு பஞ்சமியி னனசன நோன்பு கொண்டு
தங்குமாண் டைந்து நோற்றான் றானைந்து திங்க ளன்றே.
-
152. இந்தநற் கிரமந் தன்னி லினிமையி னோன்பு நோற்று
அந்தமி லருகர் பூசை யருண்முனி தானஞ் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந் தரச ராகிப்
பந்ததீ வீனையை வென்று பஞ்சம கதியு மாமே.
முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன் வந்து அழைத்தல்
-
153. என்றவ ருரைப்பக் கேட்டு யிறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழை யோடு மன்னன்
நன்றுடன் செல்லு நாளு ணயந்தரன் வந்தி றைஞ்சி
உன்னுடைத் தந்தை யுன்னை யுடன் கொண்டு வருக வென்றான்.
நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்
-
154. அமையுநன் கமைச்சன் சொல்லை யருமணி மார்பன் கேட்டு
சமையுநாற் படையுஞ் சூழச் சாலலக் கணையி னோடும்
இமையம்போற் களிற்றினேறி யினியநற் றோழன் மாரும்
இமையவற் கிறைவன் போல வெழில்பெறப் புக்க வன்றே.
மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்
வேறு
-
155. தாதையெதிர் கொள்ளவவன் றாழ்ந்தடி பணிந்தான்
ஆதரவி னன்மகனை யன்புற வெடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதமில்சீ ரின்புற வினிதுட னிருந்தார்.
நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்
-
156. வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியி னாரை
யுற்றுடனே மாதரை யொருங்கழைக்க வந்தார்
சித்திரநற் பாவையரைச் சேர்ந்துட னிருந்தான்
பற்றறச் செயந்தரனும் பார்மகன் வைத்தான்.
-
157. நாககும ரன்றனக்கு நன்மகுடஞ் சூட்டிப்
போகவுப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகம னடைக்குமுனி யவரடி பணிந்து
யேகமன மாகியவ னிறைவனுருக் கொண்டான்.
பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்
-
158. இருவினை கெடுத்தவனு மின்பவுல கடைந்தான்
பிரிதிவிநற் றேவியுந்தன் பெருமகனை விட்டு
சிரிமதி யெனுந்துறவி சீரடி பணிந்து
அரியதவந் தரித்தவளு மச்சுத மடைந்தாள்.
நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள் அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்
-
159. வேந்தனர்த்த ராச்சியம் வியாளனுக் களித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக் கவனிக ளளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக் கணைதன்னை
வாய்ந்தமகா தேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.
இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்
-
160. இலக்கணையார் தன்வயிற்றி னற்சுதன் பிறந்தான்
மிக்கவன்ற னாமமு மிகுதேவ குமாரன்
தொக்ககலை சிலையியிற் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுடனே வூர்ந்துதினஞ் சென்றான்.
நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்
-
161. புரிசையெழ நிலத்தின்மிசை பொற்புற விளங்கும்
அரியவரி யாசனத்தி லண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்களெண் ணாயிரவர் சூழ
இருகவரி வீசவினி யெழில்பெற விருந்தான்.
மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்
-
162. அரசனினி தியல்பினி னமர்ந்திருக்கு மளவிற்
பரவுமுகின் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவந் தாங்கவவ னன்புட னெழுந்தான்.
-
163. அமலமதி கேவலியின் அடியிணை வணங்கி
விமலனுருக் கொண்டனனல் வேந்தர்பலர் கூட
கமலமல ராணிகர்நற் காட்சியிலக் கணையும்
துமிலமனைப் பதுமையெனுந் துறவரடி பணிந்தாள்.
நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்
வேறு
-
164. நறுங்குழ லிலக்க ணையு நங்கை மார்தங் கூட
உறுதவந் தரித்துக் கொண்டு வுவந்தவர் செல்லு நாளுள்
மறுவில்சீர் முனிவ னாய னாக குமாரன் றானும்
இறுகுவெவ் வினைகள் வென்று யினிச்சித்தி சேர்ந்த தன்றே.
-
165. வியாளமா வியாளர் தாமும் விழுத்தவத் தனயை யென்னு
நயாவுயிர் தியானந் தன்னா னாலிரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்தபூ சனையுஞ் செய்ய
மயாவிறப் பிறப்பு மின்றி மருவினார் முத்தி யன்றே.
-
166. அருந்தவ யோகந் தன்னா லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று வின்புறுஞ் சித்தி சேர்ந்தார்
மருவுநற் றவத்தி னாலே மற்றுமுள் ளோர்க ளெல்லாம்
திருநிறைச் சோத மாதி சேர்ந்தின்பந் துய்த்தா ரன்றே.
-
167. நாகநற் குமரற் காயு நான்காண் டைஞ்நூற் றிரட்டி
ஆகுநற் குமார கால மைந்து முப்பத் திரட்டி
போகபூ மியாண்ட பொருவி லெண்ணூ றுவாண்டு
ஆருநற் றவத்தி லாண்டு வறுபத்து நான்க தாமே.
-
168. மறுவறு மனைய வர்க்கு மாதவர் தமக்கு மீந்த
பெறுமிரு நிலங்க ளெங்கும் பெயர்ந்து நற்கே வலியாய்
அறமழை பொழிந்த கால மறுபத்தா றாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கு முற்றெழு குழாத்தி னோடே.
நூற் பயன்
-
169. இதன்கதை யெழுதி யோதி யின் புறக் கேட்ப வர்க்கும்
புதல்வர்நற் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதமுறு கவலை நீங்கிக் காட்சிநல் லறிவு முன்பாய்ப்
பதமிகு மமர யோகம் பாங்குடன் செல்வ ரன்றே.
உலகிற்கு அறவுரை
-
170. அறமின்றிப் பின்னை யொன்று முயிர்க்கர ணில்லையென்றும்
மறமின்றி யுயிர்க் கிடர்செய் மற்றொன்று மில்லை யென்றும்
திறமிது வுணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக் கஞ்சி
மறமிதை விட்ட றத்தில் வாழுமின் னுலகத் தீரே.
(ஐந்தாம் சருக்கம் முற்றும்)
பின்னையோர் உரை
-
முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்து நான்காம்
பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்ற தன்றே.
இன்புறு மைந்து தன்னி லிரட்டித்த பதின்மூன் றாகும்
நன்புறத் கூட்டவெல்லா நான்கை நாற்பதின் மாற
வன்பினற் றொகையின் மேலே வருவித் தீரைந் தாகும்
இன்புறக் கதையைக் கேட்பா ரியல்புடன் வாழ்வ ரன்றே.
இவற்றுள் இக் காவியத்தில் உட்பிரிவுகளாகிய ஐந்து சருக்கங்களிலும் தனித்தனி அடங்கிய செய்யுள்களும், நூல் முழுமைக்கும் ஆன செய்யுள் தொகையும் சுட்டப்பட்டுள்ளன.
முதற் சருக்கம் கவி 39, இரண்டாம் சருக்கம் கவி 34
மூன்றாம் சருக்கம் கவி 28; நான்காம் சருக்கம் கவி 43
ஐந்தாம் சருக்கம் கவி 26. ஆகக் கவி 170
இந் நாககுமாரன் கதையை இன்புறக் கேட்போர் நல்லியல்பு களுடன் வாழ்வர் என்று பயனும் கூறி இக் காவியத்தின் பாடல் தொகைப் பாடல் முடிவுறுகிறது.
--------------
This file was last updated on 6 Jan. 2018
Feel free to send the corrections to the .